கோலாங் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் ஐம்பது பேர் விசாரணை வலையின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சூதாட்டம், பாலியல் தொழில் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிடோக் காவல் நிலையத்தின் தலைமையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில் குற்றப் புலனாய்வுத் துறை, மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத் துறை, நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை பங்கேற்றன.
செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கப்பட்ட சோதனை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீடித்தது. அவ்வட்டாரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்குவது சோதனையின் நோக்கம்.
21 வயது முதல் 73 வயது வரையிலான ஐம்பது பேரும் சோதனையில் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களில் 47 பேர் ஆண்கள். மூன்று பேர் பெண்கள். 73 வயது முதியவரும் ஒரு பெண்ணும் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த சோதனையில் பிடிபட்டனர். சிம்ஸ் அவென்யூவில் உள்ள தொழிற்சாலைக் கட்டடத்தில் காவல்படையும் குடிநுழைவுத் துறையும் நடத்திய சோதனையில் இவர்கள் சிக்கினர்.
அக்டோபர் 3, 5ஆம் தேதி கேலாங் வட்டாரத்தில் உள்ள சாலைகளில் சுகாதார அறிவியல் ஆணையம், மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவுத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் சோதனையிட்டதில் 29, 38 வயது உள்ள இரண்டு நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சோதனையில் 4,000 வெள்ளி ரொக்கம், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.