பீஷானுக்கும் நகர்ப்பகுதிக்கும் இடையே மிதிவண்டி ஓட்டிகள் பயணம் செய்யும்போது தீவு விரைவுச்சாலையைக் கடக்க அதிகச் சிரமத்திற்கு உள்ளாவதை அடுத்து 2027ஆம் ஆண்டு முதல் திறக்கப்படும் புதிய உயர்த்தப்பட்ட பாலம் ஒன்றின்வழி எளிதில் பயணம் செய்யலாம்.
இந்த 682 மீட்டர் நீள மிதிவண்டிப் பாலம், தீவு விரைவுச்சாலையின் 14 வழித்தடப் பகுதியைக் கொண்டுள்ளது.
காலாங் பூங்கா இணைப்பையும் பீஷான்-முதல்-நகர்ப்பகுதி வரையிலான மிதிவண்டிப் பாதை நீட்டிப்பையும் சேர்த்து 10 கிலோமீட்டர் நீள தடையற்ற பயணப் பாதையாக மாற்றும் நகர மறுசீரமைப்பு ஆணையத் திட்டத்தின் இறுதி அம்சம் இது.
ஆணையம் அக்டோபர் 5ஆம் தேதியன்று பாலம் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது.
அதிகப் போக்குவரத்து உள்ள சாலைச் சந்திப்பில் மிதிவண்டி ஓட்டுவது ஆபத்தானதோடு, ஐந்து போக்குவரத்து விளக்குகள் இருப்பதால் நேரம் விரயமாவதாகச் சில மிதிவண்டி ஓட்டிகள் தெரிவித்தனர்.
தங்களுக்கு இச்சிரமம் பழகிப் போய்விட்டது என்றாலும் புதிய பாலம் வரவேற்கத்தக்க திட்டம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.