புக்கிட் பாத்தோக், கிளமெண்டி, ஜூரோங் வெஸ்ட், குவீன்ஸ்டவுன் ஆகிய குடியிருப்பு வட்டாரங்களில் புதிய மிதிவண்டிப் பாதைகள் கட்டப்பட உள்ளன. நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தீவெங்கும் மிதிவண்டிப் பாதைக் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் இந்த மிதிவண்டிப் பாதைகள் கட்டப்படுகின்றன.
இது, இவ்வாண்டு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாவது கட்ட புதிய மிதிவண்டிப் பாதைகள்.
“இதுதொடர்பாக தேவையான ஆய்வுகள் முடிந்ததும் மிதிவண்டிப் பாதைகளுக்கான கட்டுமானப் பணிகள் கட்டங்கட்டமாகத் தொடங்கும். மிதிவண்டிப் பாதைகளால் கிடைக்கும் பலன்களைக் குடியிருப்பாளர்கள் கூடிய விரைவில் பெற இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
“அடுத்த ஆண்டிலிருந்து கட்டுமானப் பணிகள் கட்டங்கட்டமாக நிறைவடையும். போக்குவரத்து நிலையங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவற்றுடன் பூன் லே, நன்யாங், பைனியர் வெஸ்ட், டோவர் போன்ற வட்டாரங்களுக்குமான இணைப்புகள் மேம்படுத்தப்பட்டிருக்கும்,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
புதிய மிதிவண்டிப் பாதைகளை கட்டும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க ஆணையம் ஏலக்குத்தகை நடத்துகிறது.
கேலாங், ஹவ்காங், காக்கி புக்கிட், மரின் பரேட், பொத்தோங் பாசிர், செங்காங், சிராங்கூன் ஆகிய ஏழு குடியிருப்பு வட்டாரங்களில் புதிய மிதிவண்டிப் பாதைகள் கட்டப்படும் என்று கடந்த ஜனவரி மாதத்தில் ஆணையம் அறிவித்தது.
நகர மையம், புக்கிட் மேரா, காலாங், தெலுக் பிளாங்கா போன்ற மத்திய வட்டாரங்களில் மிதிவண்டிப் பாதைகள் கட்டப்படும் என்று கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.
தீவெங்கும் மிதிவண்டிப் பாதைக் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ், சிங்கப்பூர் எங்கும் மிதிவண்டிப் பாதைகள் கட்டப்படுவதை ஆணையம் விரைவுபடுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரோக்கியமான, பசுமைமிக்கப் பயணங்களை ஊக்குவிக்க இவ்வாறு செய்யப்படுவதாக அவர்கள் கூறினர்.
பசுமைமிக்க பயணங்களுக்கு ஏற்பாடு செய்வதுடன், ஆணையத்தின் நீடித்த நிலைத்தன்மைமிக்க முயற்சிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய கட்டுமான முறைகளுக்கும் பொருள்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் பொருள்களில் குறைந்த அளவிலான கரிமம் உள்ள கான்கிரீட்டும் அடங்கும்.
அதுமட்டுமல்லாது, எஃகுக்குப் பதிலாக கிளாஸ் ஃபைபரால் வலுபடுத்தப்பட்ட பாலிமர் பயன்படுத்தப்படும். அது எஃகைவிட இலேசானது. அத்துடன், எஃகைவிட வலிமைமிக்கது, துருபிடிக்காதது என்று ஆணையம் தெரிவித்தது.
திட்டம் முழுமையாக நிறைவடைந்ததும், 2030ஆம் ஆண்டுக்குள் 1,300 கிலோ மீட்டர் மிதிவண்டிப் பாதை இருக்கும் என்றும் பெரும்பாலான வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிலிருந்து சில நிமிடங்களிலேயே மிதிவண்டிப் பாதையை அடைந்துவிடலாம் என்றும் ஆணையம் தெரிவித்தது.