வழக்கறிஞரும் எதிர்க்கட்சி அரசியல்வாதியுமான லிம் தியன் மீது நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது, சட்டவிரோத பின்தொடர்தல், தகுந்த சான்றிதழ் இல்லாமல் வழக்கறிஞராகச் செயல்பட்டது ஆகியவை தொடர்பாக நாளை குற்றம் சுமத்தப்படும்.
திரு லிம்மின் முன்னாள் கட்சிக்காரர் ஒருவருக்கு வாகன விபத்தில் காயமடைந்ததற்கு $30,000 இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தம்மிடம் நம்பி கொடுக்கப்பட்ட அத்கொகையை திரு லிம் கை
யாடியதாகவும் கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டில் தமது கார்சன் சட்ட நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பெண் ஒருவரை சட்டவிரோதமான முறையில் திரு லிம் பின்தொடர்ந்ததாகவும் நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கும் ஜூன் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வழக்கறிஞராகச் செயல்படுவதற்கான சான்றிதழ் இல்லாதபோதிலும் 66 வெவ்வேறு சம்பவங்களில் அவர் வழக்கறிஞர் சேவை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மற்ற விவகாரங்கள் குறித்தும் திரு லிம்முக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்தது. நம்பிக்கை மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் திரு லிம்முக்கு ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம். திரு லிம் சட்டவிரோதமாகப் பின்தொடர்ந்தது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.