பாழான ‘கார்ட்லைஃப்’ ரத்த அலகுகளுக்கான இழப்பீடுகளையும், திரும்பக் கொடுக்கப்படக்கூடிய பணத்தையும் சுகாதார அமைச்சு இடம்பெறாத வர்த்தகக் குத்தகைகள் நிர்வகிப்பதால் அரசாங்கம் அத்தகைய விவகாரங்களில் தலையிட முடியாது என்று டாக்டர் ஜனில் புதுச்சேரி மே 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
‘கார்ட்லைஃப்’ என்ற தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கி ரத்த அலகுகளைத் தவறாகக் கையாண்டது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு குறித்து சுகாதார மூத்த துணை அமைச்சரான டாக்டர் ஜனில் பேசினார்.
“அரசாங்கம் சட்டத்தை மீறிச் செயல்படமுடியாது. அரசாங்கம் எந்த அளவு தலையிடமுடியும் என்பதற்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக இழப்பீடு, திரும்பக் கொடுக்கப்படக்கூடிய பணம் போன்ற விவகாரங்களில்,” என்றார் அவர்.
சுகாதார அமைச்சு பெற்றோரின் கவலைகளைப் புரிந்துகொள்கிறது என்றபோதும், தொப்புள்கொடி ரத்த வங்கிச் சேவை, தனியார் துறை வழங்கும் சொந்த விருப்பத்தில் பயன்படுத்தக்கூடிய வர்த்தகச் சேவையாகும் என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட ‘கார்ட்லைஃப்’ வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை நிலையிலான இழப்பீடு வழங்கப்படுவதை சுகாதார அமைச்சு உறுதிசெய்யமுடியுமா என்று செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் சுவா கேட்ட கேள்விக்கு டாக்டர் ஜனில் பதில் அளித்தார்.
‘கார்ட்லைஃப்’ நிறுவனத்தில் 22 தொப்புள்கொடி சேமிப்புக் கலன்களில் ஏழின் வெப்பநிலை உகந்தநிலையில் இல்லாதது கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் செயல்முறைகள் அதிகமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.