சென்ற ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இறுதிக் காலாண்டில் டெங்கித் தொற்று காரணமாக மூவர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து, 2023ஆம் ஆண்டில் டெங்கித் தொற்றால் சிங்கப்பூரில் மொத்தம் அறுவர் இறந்துவிட்டனர்.
தேசிய சுற்றுப்புற வாரியம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) வெளியிட்ட அண்மைய காலாண்டு அறிக்கை இதனைத் தெரிவிக்கிறது.
2023 அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் மொத்தம் 2,546 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர். இது, அதற்கு முந்திய காலாண்டைக் காட்டிலும் 16.6 விழுக்காடு குறைவு.
கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருவரும் மூன்றாம் காலாண்டில் ஒருவரும் டெங்கித் தொற்றால் உயிரிழந்தனர்.
முந்திய 2022ஆம் ஆண்டில் டெங்கி காரணமாக 19 உயிரிழப்புகள் பதிவாயின. அவ்வாண்டில் மொத்தம் 32,235 பேரை டெங்கி தொற்றியது. 2021ஆம் ஆண்டில் டெங்கியால் ஐவர் மாண்டுபோயினர்.
இதனிடையே, தொடர்ந்து ஏழாவது வாரமாக டெங்கித் தொற்று அதிகரித்துள்ளது. 2024 ஜனவரி 14 முதல் 20 வரையிலான வாரத்தில் 410 பேரை டெங்கி தொற்றியதாக சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
ஒட்டுமொத்தத்தில், நடப்பு ஜனவரியில் மட்டும் இதுவரை 1,180 பேர் டெங்கித் தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர். இது, முந்திய மூவாண்டுகளின் ஜனவரி மாதத்தைக் காட்டிலும் அதிகம்.
இப்போது 80க்கும் மேற்பட்ட டெங்கித் தொற்றுக் குழுமங்கள் இருப்பதாகவும் அவற்றுள் 19, தொற்று அபாயம் அதிகமுள்ள இடங்களாகவும் சுற்றுப்புற வாரியத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பத்து அல்லது அதற்கும் மேல் தொற்று பதிவான குழுமங்கள் அபாயமிக்கவையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
பூன் லே, பாசிர் ரிஸ், அங் மோ கியோ உள்ளிட்டவை டெங்கி அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக இருக்கின்றன.
பூன் லே பிளேஸ் குழுமத்தில் ஆக அதிகமாக 216 பேரும் அதனையடுத்து பாசிர் ரிஸ் ஸ்திரீட் 71 குழுமத்தில் 119 பேரும் டெங்கியால் பாதிக்கப்பட்டுவிட்டனர்.
இதனையடுத்து, டெங்கித் தொற்று இருக்கும் பகுதிகளில் வசிப்போர் அது மேலும் பரவாமல் தடுக்க தங்கள் பங்கை ஆற்றுமாறும் கொசுப் பெருக்க இடங்களைக் கண்டறிய தன் அதிகாரிகள் வரும்போது அவர்களுக்கு ஒத்துழைக்குமாறும் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், பூச்சிவிரட்டியைப் பயன்படுத்துவது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு, ஏடிஸ் கொசுக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.