fontsize: 60% 70% 80% 90%

அமெரிக்க-தென் கொரியப் படைகளின் பயிற்சி தொடங்கியது

அமெரிக்க-தென் கொரியப் படைகள் வட கொரியாவின் தாக்குதல் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது நேற்று ஜப்பானியக் கடலில் பயிற்சியைத் தொடங்கின.

இந்த மாபெரும் போர்ப் பயிற்சியில் 20 போர்க்கப்பல்கள், 200 விமானங்கள், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த 8,000 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாண்டு மார்ச் மாதம் தென் கொரியாவின் போர்க்கப்பலை வட கொரியா தாக்கி மூழ்கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து வட கொரியாவுக்கு இரு நாடுகளும் தெளிவான சமிக்ஙை அனுப்பும் விதமாக இந்தப் போர்ப் பயிற்சி அமையும் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

எனினும், தென் கொரியப் போர்க்கப்பலை மூழ்கடித்ததாகக் கூறப்படுவதை மறுத்த வட கொரியா இந்தப் பயிற்சி தொடருமானால் தான் அணுவாயுதங்களைக் கொண்டு புனிதப் போர் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

தங்களது இரு நாடுகளின் வலிமையை வெளிப்படுத்தி வட கொரியாவின் அரசியல் மற்றும் ராணுவத் தலைமையை அதிர வைப்பதே இந்தப் போர்ப் பயிற்சியின் நோக்கம் என்று பயிற்சிக் கப்பலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஜான் சட்வொர்த் கூறுகிறார்.
ஆனால் இந்தப் போர்ப் பயிற்சியும் அதன் மூலம் வெளிப்படும் ராணுவ வலிமையும் வட கொரியாவின் தீவிரவாதிகளை ஊக்குவிக்கவே பயன்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் எரிச்சலூட்டும் பிரசாரம் புதிதல்ல என்றபோதிலும் இந்தப் போர்ப் பயிற்சி அந்த வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, அனைத்துத் தரப்பினரையும் பொறுமையைக் கடைப் பிடிக்கும்படி சீனா அறிவுறுத்தியுள்ளது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838