fontsize: 60% 70% 80% 90%

இந்தியா போன சிறுத்தைப் புலிகளுக்கு உடல் நலமில்லை

சிங்கப்பூர் சிறுத்தைப் புலிகளால் இந்தியாவின் வெய்யிலைத் தாங்க முடியவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிருந்து குஜராத்தின் சக்கர்பாக் விலங்கியல் தோட்டத்துக்கு அனுப்பப்பட்ட நான்கு சிறுத்தைப் புலிகளின் உடல்நிலை மோசமாக உள்ளதாக இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவை சுவாச நோய் பிரச்சினையால் அவதிப்படுகின்றன. அதனால் அவை பொதுக் காட்சியில் இருந்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளன.
சிறுத்தைப் புலிகளுக்குச் சிகிச்சை அளிப்பது குறித்து குஜராத் விலங்கியல் தோட்ட அதிகாரிகள், சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளனர்.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தைச் சேர்ந்த திரு பிஸ்வஜித் குகா, சின்மின் சீன பத்திரிகையிடம் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
விலங்குப் பரிமாற்றுத் திட்டத்தின் கீழ் இவை இந்தியாவுக்கு அனுப்பப் பட்டன. சிறுத்தைப் புலிகளுக்குப் பதிலாக, மூன்று சிங்கங்களை நைட் சஃபாரிக்காக சிங்கப்பூர் பெற்றது என்பதையும் திரு பிஸ்வஜித் தெரிவித்தார்.
அருகி வரும் அரிய விலங்குகள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக இத்தகைய விலங்குப் பரிமாற்றுத் திட்டம் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். படம்: சின்மின்

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838