- தமிழவேல் -
கடந்த எட்டு ஆண்டுகளாகத் தமது மோட்டார் சைக்கிளில்தான் செய்தித்தாள் விநியோகம் செய்து வருகிறார் திரு பாலகிருஷ்ணன் ரகுராமன்.
அதிகாலையிலேயே மோட்டார் சைக்கிள் கிளப்பும் ஓசை தங்களைத் தொந்தரவு செய்து தூக்கத்தைக் கலைக்கிறது என்று பலர் அவரிடம் புகார் கொடுத்து வந்துள்ளனர்.
ஆனால் ஐந்து மாதங்களாக அந்த பிரச்சினையே இல்லை.
அவரின் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் அதிகாலையில் சத்தமின்றி நிம்மதியாக உறங்குகிறார்கள்.
அதற்கு தமது புதிய மின் சைக்கிளே காரணம் என்றார் 42 வயது திரு ரகுராமன்.
மின்சக்தியில் இயங்கும் இந்த சைக்கிள் எந்த ஓசையையும் எழுப்புவதில்லை. சைக்கிளை அடிக்கடி நிறுத்தி செய்தித்தாள் விநியோகம் செய்ய முடிகிறது. உபயோகிப்பதும் எளிது. செலவும் இல்லை’’ என்றார் திரு ரகுராமன்.
வீட்டில் காலை நேரத்தில் கைத் தொலைபேசிக்கு உயிரூட்டும் போது, மின்சைக்கிளுக்கு மின்சக்தி ஊட்டலாம்.
கிட்டத்தட்ட 4-5 மணி நேரம் உயிரூட்டிய பிறகு 50 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது ‘அம்பியர்’ நிறுவனத்தின் இந்த புதிய மின் சைக்கிள்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான திருமதி ஹேமலதா அண்ணாமலையின் நான்கு ஆண்டுகால முயற்சியில் உருவான இந்த மின்சைக்கிள் நேற்று அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தாம் உருவாக்கிய மின்சார ஸ்கூட்டரில் பவனி வரும் ஹேமலதா (படம்), அனைத்துலக அளவில் இந்த மின்சார சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை பிரபலப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.