உலக வரைபடத்தில் ஒரு புள்ளி அளவுகூட இல்லை என்றாலும் மனிதாபிமானம் என்று வரும்போது மலை போன்று விஸ்வரூபம் எடுக்கும் வழமை சிங்கப்பூரிடம் உண்டு.
உலகமயமாகி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து விட்ட நடப்பு உலகில், யாரையும் பகைத்துக் கொள்ளாத வெளியுறவுக் கொள்கையைக் கொண்டது சிங்கப்பூர்.
அது, தான் மட்டும் வாழ்ந்தால் போதாதென்று சகோதரத்துவச் சகவாழ்வில் நாட்டம் கொண்டுள்ளது.
இவற்றோடு மனிதாபிமானப் பணிகளில் ‘செயற்கரிய செய்யும் பெரியவராகத்’ திகழ்கிறது சிங்கப்பூர்.
இந்தியா, தாய்லாந்து இந்தோனீசியாவில் சுனாமி, இந்தோனீசியா, சீனாவில் நிலநடுக்கப் பேரிடர்கள்;
பங்ளாதேஷ், பிலிப்பீன்சில் புயல், உலகெங்கம் ஐநா அமைதிப் பணிகள், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு;
இலங்கையில் அகதிகளுக்கு உதவி என்று எல்லாவற்றிலும் உதவிக்கரம் நீட்டி வெறும் நிதி, பொருள்கொடையுடன் நின்று விடாமல் உடலுழைப்பைபும் தந்து உதவுகிறது சிங்கப்பூர்.
பக்கத்து நாடாக இருந்தாலும் பெரிய நாடுகள் என்றாலும் தொலைதூர நாடுகளானாலும் எங்கு உதவி தேவைப்படுகிறதோ எப்போது தேவைப்படுகிறதோ அங்கு, அப்போது சிங்கப்பூரின் உதவிக்கரம் நீளுகிறது.
இயற்கைப் பேரிடர் ஆனாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றாலும் கல்வி போதிக்கவேண்டும் என்றாலும் உடல் நல மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எதுவானாலும் சிங்கப்பூர் தனது ஆயுதப் படைகளை அனுப்பி அமைதி வழிக்கு அதைப் பயன்படுத்தி வருகிறது.
அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு நாட்டுக்குப் பாதுகாப்புக் கேடயமாகத் திகழும் சிங்கப்பூர் ஆயுதப் படையின் கைகள், இதுநாள் வரை போரைச் சந்தித்ததில்லை.
ஆனால் மனிதாபிமானப் பணிகளை அது சந்திக்காமல் இருந்ததில்லை.
இப்போதுகூட, இந்தோனீசியாவுக்கு மோப்ப நாய்களுடன் சென்றுள்ள சிங்கப்பூர் ஆயுதப் படைகள் நிலநடுக்கப் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வளர்ந்துவிட்ட நிலையை எட்டிவிட்ட சிங்கப்பூரின் ஆயுதப்படை, மனிதாபிமான உதவிகளைத் தனது அமைதிக் கால கடமையாகக் கொண்டுள்ளது.
தான் மேற்கொள்ளும் உதவி நடவடிக்கைகளின் வாயிலாக சிங்கப்பூர் தானும் நேரடி அனுபவத்தைப் பெற்று பலதுறை ஆற்றலையும் கற்கிறது.
தான் மட்டும் வாழ்ந்தால் போதாது என்று ‘வாழு, வாழ விடு’ தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் சிங்கப்பூர், மனிதாபிமான உதவிகளில் தான் யாருக்கும் சளைக்கவில்லை என்பதை நிலைநாட்டி கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பதை மெய்ப்பித்து வருகிறது.
பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதற்கு ஓர் அடையாளமாகத் திகழும் ஒரு சிறிய நாடு, காலத்தால் செய்யும் உதவி சிறியதானாலும் அது ஞாலத்தின் மாணப் பெரிது என்பது திண்ணம்.