தாவரப் பால் நுகர்வு உலகளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து கூடி வருகிறது.
கடந்த ஆண்டு ‘மிலியூ’ நடத்திய ஆய்வில் பதிலளித்த சிங்கப்பூரர்களில் 87 விழுக்காட்டினர் தாவரப் பால் அருந்தியிருப்பதும், அவர்களில் 67 விழுக்காட்டினர் தொடர்ந்து அதனை அருந்தி வருவதும் தெரிய வந்தது.
தாவரப் பாலின் சந்தை வருவாயும் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஏறத்தாழ 12 விழுக்காடு அதிகரித்ததாகவும், 2028 வரை அது அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் மற்றொரு ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
கலோரி அடிப்படையிலான உணவுப் பழக்கம் , ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஆகியவை பலரை புதிய வகை உணவுகளை முயன்று பார்க்கத் தூண்டுகிறது. அதில் ஒரு முக்கிய பானம் பால்.
அனைத்து வயதினருக்கும் தகுந்த பானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள, விலங்குகளிடமிருந்து பெறப்படும் பாலில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி12, டி, பொட்டாசியம், மெக்னீசியம் என பல ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன.
எனினும், பாலிலுள்ள ‘லாக்டோஸ்’ சர்க்கரையால் ஏற்படும் ஒவ்வாமை, பாலில் சேர்க்கப்படும் பதப்படுத்திகள், பிரபலமாகியுள்ள ‘வீகன்’ எனும் உணவுமுறையைப் பின்பற்றுதல் என பல காரணங்களுக்காக தாவரப் பாலுக்கு மாறும் போக்கும் அதிகமாகி வருகிறது.
குறிப்பாக, சிங்கப்பூரர்களில் 20 விழுக்காட்டினர் இதனை முதன்மை விருப்பமாக மாற்றியுள்ளதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது. இது குறைந்த அளவாகத் தோன்றினாலும், பால், பால் பொருள்களுக்கான மாற்று விருப்பம் உருவாகி வருவதை இது சுட்டிக்காட்டுகிறது.
தேங்காய், பாதாம், சோயா, நிலக்கடலை, அரிசி, ஓட்ஸ், பட்டாணி எனப் பலவற்றிலிருந்து பெறப்படும் தாவர பால்கள், ஏறத்தாழ விலங்குகளின் பாலுக்கு இணையான கால்சியம், வைட்டமின் போன்ற சத்துகளைத் தரவல்லவை என சொல்லப்படுகிறது.
சோயா பாலின் குறைந்த அளவு கொழுப்பும், பாதம் பாலில் இதயத்தை வலுப்படுத்தும் நல்ல கொழுப்பும், ஆக்ஸிஜனேற்றமும், அழற்சி எதிர்ப்புத் திறனும் கொண்ட வைட்டமின் ஈ அளவும், ஓட்ஸ் பாலில் அதிக நார்ச்சத்தும் உள்ளதால் பலர் அவற்றை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர்.
புரதத்தின் அடிப்படையில் பசுவின் பாலுக்கு சோயா பால் சிறந்த மாற்றாக கருதப்படுவதோடு, காப்பி அருந்துபவர்களின் விருப்பமாகவும் மாறி வருகிறது.
சில காப்பி கடைகள், உள்ளூர் ஓட்ஸ் பால் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, இவ்வகை வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில வெளிநாட்டு காப்பித்தூள் தயாரிக்கும் நிறுவனங்கள், சோயா, பாதாம் பால் சேர்த்து தயாரிப்பதற்கென்றே தனித்துவமான காப்பிக் கலவையை அறிமுகம் செய்துள்ளன.
நீடித்த நிலைத்தன்மை ஆர்வலர்கள், பசுவின் செரிமான மண்டலம் வெளியேற்றும் மீத்தேன் வாயுவின் அளவு, உலகளவில் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்கும் வாயு வெளியேற்றத்தில் ஆறு விழுக்காடாக உள்ளது.
அத்துடன், பால் பண்ணைக்கு அனுப்பப்படும் தீவனத்தை விளைவிப்பதற்கு ஆகும் செலவும் அதிகம். இதனாலும் தாவரப் பாலுக்கு மாற வேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
விலங்கிலிருந்து வரும் பாலுக்கு இணையான மாற்றைத் தேர்ந்தெடுப்பது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், ஒவ்வொருவரின் உடல் அமைப்பை ஆராய்ந்து அதற்கேற்ற சரியான தெரிவை, உணவியல் நிபுணர்கள், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் உட்கொள்வது சிறந்தது.