மனித மூளை சரிவரச் செயல்பட நாளொன்றுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
அத்துடன், பிற்பகலில் ஏற்படும் மூளைச் சோர்வைத் தணிக்க ‘பவர் நேப்’ எனப்படும் குட்டித் தூக்கம் மூளைக்குப் புத்துணர்வைத் தருகிறது.
உணவுண்ட பின் உடனடியாகத் தூங்காமல் சிறிது நேரம் சென்றபின் தூங்குவது முக்கியம். குறிப்பாக பிற்பகலில் 2 அல்லது 3 மணி அளவில் 10 நிமிடம் தொடங்கி, 30 நிமிடங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இந்தப் பகல்நேரச் சிறுதுயில், அறிவுசார் செயல்பாட்டை மேம்படுத்தி, மூளைச் சோர்வை நீக்குகிறது.
பணிக்கு நடுவில் குட்டித் தூக்கம் போடுவது, நினைவாற்றல் திறனை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக இளையர்கள் இதனை மேற்கொள்வது நன்மை தருவதாகச் சொல்லப்படுகிறது.
நடுத்தர வயதினருக்கு, குறிப்பாக ஆண்களுக்கு குட்டித் தூக்கத்தை தொடர்ந்து மேற்கொள்வது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. அது, பணி தரும் மன அழுத்தத்தை நீக்கி, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை குறைக்க ஒரு வழியாக அமைகிறது.
வயதானவர்களுக்குச் சோர்வைக் குறைத்து, மறதிநோய் உள்ளிட்ட பாதிப்புகளின் அளவை குறைக்கிறது.
செயல்திறனை அதிகரிப்பதற்காக, சில நாடுகளில் சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பிற்பகலில் அரைமணி நேரம் வரை உறங்க அனுமதிக்கின்றன.
நீண்டநேர பகல் தூக்கம் ஏற்படுத்தும் சிக்கல்
பிற்பகலில் சற்று கண் அயர்வதில் தவறில்லை என்றாலும், மணிக்கணக்காக உறங்குவது தவறு என்றும் அது நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட பிரச்சினைகள் உண்டாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நீண்ட நேர பகல் தூக்கம் உடலில் வீக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
அரைமணி நேரத்துக்கும் குறைவான பகல் உறக்கம், ஆழ்ந்த உறக்கத்திற்குச் கொண்டு செல்லாமல் தற்காலிகமான ஓய்வை மட்டும் வழங்குகிறது.
இரண்டு மணி நேர பகல் உறக்கம், உறக்க சுழற்சியின் ஆரம்ப கட்டத்திற்கு அழைத்துச் சென்று, அந்த உறக்கச் சுழற்சி முழுமையடையும் முன்பே கண்விழிப்பதால் உடல் அயர்ச்சி, தலைபாரம் ஏற்படுகிறது.
அவ்வாறு தொடர்ந்து உறக்கச் சுழற்சி தடைபடும்போது, மனநிலைத் தடுமாறத் தொடங்கும். இது குழப்பத்தை ஏற்படுத்தி, முடிவெடுக்கும் திறனை பாதிக்கலாம்.
இரவில் குறைந்த நேரம் உறங்கிவிட்டு, பகலில் அதனை ஈடுசெய்ய முயல்வதும் தவறு. இரவில் சுரக்கும் ’மெலடோனின்’ எனும், உணர்வுகளையும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன் பகலில் சுரப்பதில்லை.
எப்பொழுதாவது சோர்வினாலோ, நீண்ட பயணத்துக்குப் பிறகோ, மன அமைதிக்காகவோ, உடல் நலமில்லாத நிலையிலோ நீண்ட நேர பகல் உறக்கம் மேற்கொள்வது பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தாது.
ஆனால், அதனைத் தொடர்ந்து மேற்கொள்வது நோயெதிர்ப்பு ஆற்றலைக் குறைத்துவிடலாம். சில நேரங்களில் நரம்பியல் பாதிப்பு, வாத நோய் ஆகியவையும் ஏற்பட நேரிடலாம்.
பிற்பகலில் நீண்ட நேரம் தூங்குவதால், இரவில் தூக்கமின்மை பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இரவுத் தூக்கம் தடைபட்டால் மன அழுத்தம் அதிகரித்து, உடலுக்கு வேண்டிய சுரப்பிகள் செயல்படுவது தடைபடுகிறது.
குழந்தைகள், மூத்தோர், மறுநாள் நீண்ட தூரம் வாகனமோட்ட வேண்டியவர்கள், நோயுற்றவர்கள் பிற்பகலில் நன்கு தூங்கலாம். மேலும், கோடைக்காலத்திலும், வெப்பமான நாள்களிலும் சற்று கூடுதல் ஓய்வெடுப்பது உடலுக்கு நன்மை பயக்கும்.