புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12) தொடங்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
12 மாநிலங்களில் மே மாதம் 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் துவங்கியுள்ளது. இம்மாதம் 19ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற 22ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.
முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 19ஆம் தேதியும் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 26ஆம் தேதியும் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் மே மாதம் 7ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு - காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.