திருவனந்தபுரம்: இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
சமயத்துக்கும் அரசுக்கும் இடையேயான கோடு மிகவும் மெல்லியதாகக் காணப்படுகிறது. இது கவலை அளிக்கிறது. சமயம் வேறு; அரசு வேறு. இரண்டும் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தியுள்ளார். தற்போதைய போக்கு அவர் அளித்த உறுதிமொழிக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
சமயம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். நாட்டு மக்கள் அனைவரும் சமயத்தைக் கடைப்பிடிக்கவும், பரப்பவும் அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது. இந்த நிலத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் இந்த உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்தவர்களுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், மற்ற சமயங்களுக்கு மேலாக ஒரு சமயத்தை உயர்த்தவோ, மற்ற சமயங்களுக்கு கீழாக ஒரு சமயத்தைத் தாழ்த்தவோ கூடாது.
சமயம், மொழி, வட்டார அல்லது பிரிவு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, இந்திய மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவ உணர்வையும் வளர்க்க, ராமர் கோயில் திறப்பு விழா ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும். விஞ்ஞான மனப்பான்மை, மனிதநேயம், சீர்திருத்த உணர்வு ஆகியவற்றின் வளர்ச்சியில்தான் நாட்டின் செழிப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.