லக்னோவ்: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்து முடிந்த பிறகு பிரதமர் மோடி உரையாற்றினார்.
ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நீடித்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
“நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பல ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். பகவான் ராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல, புதிய காலச்சக்கரத்தின் துவக்கம் என்று பிரதமர் மோடி கூறினார்.
“ஒட்டுமொத்த தேசமே ராமர் கோவில் திறப்பை தீபாவளிபோல கொண்டாடுகிறது. யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல.கண்ணியமாக கிடைத்த வெற்றி. அயோத்தியில் நிறுவப்பட்டது சிலை மட்டும் அல்ல. இந்திய கலாசாரமும்கூட.
“ராமர் கோயிலுக்காக பாடுபட்ட கரசேவகர்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ராம் என்பது யாரையும் எரிக்கும் ஆற்றல் அல்ல. சக்தியை கொடுக்கும் ஆற்றல். ராமர் புகழ் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும். பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார்.
“ராமர்தான் பாரத தேசத்தின் ஆதாரம். ராமர் கோயில் கட்ட வழிவகை செய்த இந்திய நீதித் துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
“ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவரது மனதிலும் இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோயிலை கட்டியதற்காக மக்கள் எங்களை நினைவுகூர்வார்கள். யாரையும் குறைவாக எடை போடக் கூடாது. ராமர் பாலத்திற்கு அணில் செய்த உதவி மிகப்பெரியது” என்று மோடி பேசினார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், “இன்றைய நாள் புதிய இந்தியாவின் வளர்ச்சியை குறிக்கிறது. நாட்டில் ராமராஜ்ஜியம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை புறம் தள்ள வேண்டும்,” என்றார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இன்று அனைவருடைய மனங்களிலும் ராம நாமமே ஒலிக்கிறது,” என்று கூறினார்.