புதுடெல்லி: ‘இண்டியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் பெயரை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி முன்மொழிந்ததால் கூட்டணியில் உள்ள சிலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்த ‘இண்டியா’ கூட்டணியின் நான்காவது கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் கூட்டணியின் பிரதமா் வேட்பாளராக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பெயரை மம்தா பானா்ஜியும் டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்தனா்.
ஆனால் ஐக்கிய ஜனதா தளத் தலைவரான பீகாா் முதல்வர் நிதீஷ் குமாா் அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய மம்தா பானா்ஜி, “எதிா்க்கட்சிகள் தொடர்ந்து பிரதமா் வேட்பாளா் யாா் என்று கேள்வியெழுப்பியதால் காா்கேயின் பெயரை நானும் அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்தோம்,” என்று தெரிவித்தார்.