கொச்சி: ஹெலிகாப்டரில் உரிய முறையில் கொண்டு செல்லப்பட்ட இதயம் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுவனுக்குப் பொருத்தப்பட்டது.
பதினாறு வயது சிறுவனுக்கு மாற்று இதயம் தேவைப்பட்டது.
இந்த நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தானமாக பெறப்பட்ட இதயம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் சேகர் என்பவர் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வெள்ளிக்கிழமை சிகிச்சை தொடர்ந்தபோது செல்வின் சேகர் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க சேகரின் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து கொச்சியில் ‘கார்டியோ மையோபதி’ நோயால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனுக்கு சேகரின் இதயத்தைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து கொச்சிக்கு ஹெலிகாப்டர் மூலம் இதயம் விரைவாக கொண்டு செல்லப்பட்டு, சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று தினத்தந்தி தெரிவித்தது.