புதுடெல்லி: சிந்து, கங்கை நதிகள் பாயும் சில வட்டாரங்களில், நிலத்தடி நீர் ஏற்கெனவே வற்றும் அபாய நிலையை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வேளையில், 2025ஆம் ஆண்டுக்குள் நிலைமை மிகவும் மோசமடையும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) எச்சரித்துள்ளது.
உலகம் எதிர்நோக்கும் ஆறு வகையான சுற்றுச்சூழல் விளிம்பு நிலைகள் குறித்து அதன் அண்மைய அறிக்கை எச்சரிக்கிறது.
விரைவாக அழிந்துபோகும் உயிரினங்கள், நிலத்தடி நீர் வற்றுதல், பனிமலைகளில் உருகும் பனிக்கட்டிகள், விண்வெளிக் குப்பை, தாங்க இயலாத வெப்பம், உறுதிசொல்ல இயலாத வருங்காலம் ஆகியவை அவை.
நிலத்தடி நீரில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு வேளாண் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள நீருக்குப் பற்றாக்குறை ஏற்படும்போது, நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரிக்கிறது.
நிலத்தடி நீரைத் தேக்கி வைக்கும் பாறைகள், வறட்சியால் வேளாண்துறைக்கு ஏற்படும் இழப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
ஆனால் பருவநிலை மாற்றத்தால் இத்தகைய பாறைகளே அழிந்துவருவதாக ஐநா அறிக்கை எச்சரித்துள்ளது.
ஆக அதிக நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் பயன்படுத்தும் மொத்த நிலத்தடி நீரைவிட இந்தியா அதிகம் பயன்படுத்துகிறது.