பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், (இஸ்ரோ) மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த ககன்யான் என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது.
இந்தத் திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025ஆம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, மூன்று கட்டங்களாக ககன்யான் விண்கலம் போன்று ஆளில்லா மாதிரி விண்கலத்தை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த முதல் கட்ட சோதனை சனிக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.
குறிப்பிட்ட நேரத்தில் வான்குடை உதவியுடன் மாதிரி விண்கலம் வங்கக்கடலில் இறங்கியது.
இந்த நிலையில், சோதனை முறையில் விண்ணில் ஏவப்பட்ட ஆளில்லா விண்கலம், வங்கக்கடலில் இறக்கப்பட்டதை இந்திய கடற்படையினர் மீட்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வந்தனர். பின்னர் இஸ்ரோ அதிகாரிகளிடம் விண்கலம் ஒப்படைக்கப்பட்டது.
நான்கு டன் எடை கொண்ட விண்கலத்தை கொள்கலன் வாகனத்தில் ஏற்றி, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரின் துணையுடன் துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.