புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவில் வசுந்தரா ஓரம்கட்டப்படுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அசோக் கெலாட், “அது அவர்களின் உள்கட்சி விவகாரம். அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், என்னைக் காரணம் காட்டி அவருக்கு தண்டனை வழங்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அது அவருக்கு செய்யும் அநீதியாகும்,” என்று கூறியுள்ளார்.
மேலும், 2020ஆம் ஆண்டு அவர் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க நடந்த சதியில் தனது அரசைக் காப்பாற்றிய வசுந்தராவின் செயலை நினைவுகூர்ந்துள்ளார்.
கடந்த மே மாதம் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு தனது அரசை கவிழ்க்க சதி நடந்தது.
அதன் பின்னணியில் அமைச்சர் அமித்ஷா இருந்தார். எனினும் எதிர்க்கட்சித் தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா தனது அரசை அந்த சதியில் இருந்து காப்பாற்றியதாகவும் கூறி இருந்தார். இதனை அப்போதே வசுந்தரா ராஜே சிந்தியா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் நேரடிப் போட்டி நிலவி வரும் நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரசும், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் கடும் முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜகவில் முன்னாள் முதல்வர் வசுந்தராவின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.