பொங்கல் திருநாளை முன்னிட்டு லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமை சங்கத்தின் (லிஷா) இலக்கிய மன்றம், சிறப்புப் பொங்கல் பட்டிமன்றம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூர் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆறு பேச்சாளர்கள் ‘இன்றைய இளைய சமுதாயத்தின் போக்கு வாழ்த்தும்படி உள்ளதா வருந்தும்படி உள்ளதா’ என்ற தலைப்பை ஒட்டிப் பேசினர்.
தமிழகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமான பழ. கருப்பையா, பட்டிமன்றத்தின் நடுவராக இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 7) மாலை கிளைவ் ஸ்ட்ரீட்டின் பொலி திறந்தவெளியில் இடம்பெற்ற பட்டிமன்றத்தைக் காண ஏராளமானோர் திரண்டனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இரா. தினகரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவரும் கவிமாலை அமைப்பின் உறுப்பினருமான பா. கங்கா, தொண்டூழியத்திலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஈடுபடும் இன்றைய இளைய சமுதாயத்தின் போக்கு வாழ்த்தும்படி உள்ளதாகச் சுட்டினார்.
எதிரணிப் பேச்சாளர் அர்ஜுன் நாராயணன் இதை மறுத்து, “வீட்டுக்கு விருந்தினர் வந்தால், இளையர்கள் அவர்களை வரவேற்பதை விட கைப்பேசிகளில் மூழ்கி இருப்பதைத் தான் அதிகம் காண முடிகிறது,” என்று கூறினார்.
அவர் அணியிலிருந்த மற்றொரு பேச்சாளரும் இலக்கிய மன்றத் தலைவருமான கண்ணன் சேஷாத்திரி, இளையர்கள் சமூக ஊடகத் தளங்களில் காணப்படும் தகவல்களை அதிகம் பார்ப்பதாகச் சொன்னார்.
இதனால், அடுத்தவர்களைப் போல தாங்களும் இருக்க வேண்டுமென்ற போட்டி மனப்பான்மையுடன் அவர்கள் வாழ்வதாகத் தெரிவித்தார்.
கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்று பல சாதனைகள் புரியும் இக்காலத்து இளையர்களை உதாரணங்களாகத் தனது உரையில் சுட்டினார் பேச்சாளர் ரவிக்குமார்.
இக்கால இளையர்கள் புரியும் சாதனைகள் பிரம்மிப்பை ஊட்டினாலும் அவர்கள் தங்கள் திறனைக் கொண்டு தீய செயல்களில் ஈடுபடுவது வருந்தத்தக்கது.
ஆற்றலை நல்ல வழியில் அவர்கள் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என நடுவர் பழ. கருப்பையா கூறி, இளையர்களின் போக்கு வருந்தும்படியாக இருப்பதாகத் தீர்ப்பு வழங்கினார்.