பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019ஆம் ஆண்டு ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘மகான்’ படத்தில் தந்தையுடன் நடித்தவர், இப்போது மாரி செல்வராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிப்பதாக அமைய உள்ளது.
திங்கள்கிழமை காலை இந்தப் படத்துக்கு ‘பைசன்’ என படக்குழுவினர் பெயர் சூட்டினர். . அத்துடன், படத்தின் முதல் சுவரொட்டியையும் வெளியிட்டனர். அதில் துருவ் விக்ரம் கட்டுமஸ்தான உடலுடன் காளைமாட்டுக்கு எதிரே நிற்பதுபோல் காணப்படுகிறார். படத்தை பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.
இந்தச் சுவரொட்டியை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், “கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்,” என பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரனும் லால், பசுபதி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. மேலும் இதற்காக நீண்டகாலமாக துருவ் விக்ரம் கபடிப் பயிற்சி எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சீயான் விக்ரமின் மகனாக அறிமுகமான துருவ்விற்கு இதுவரை தரமான படங்கள் அமையவில்லை. அந்தக் குறை இந்தப் ‘பைசன்’ படத்தின் மூலம் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.