இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குநர் டேனி பாய்ல் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான படம், ‘ஸ்லம்டாக் மில்லினர்’.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இதில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார் ரகுமான்.
இந்நிலையில் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘ஜெய்ஹோ’ பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கவில்லை என்று கூறினார்.
பாடகர் சுக்வீந்தர் சிங் தான் அந்தப் பாடலை உருவாக்கினார் என்றும் கூறி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதையடுத்து சுக்வீந்தர் சிங் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘ஜெய் ஹோ’ பாடலை இசையமைத்தது ரகுமான் தான். குல்சார் பாடலை எழுதினார். ரகுமானுக்கு வார்த்தைகள் பிடித்திருந்தன. ஜூஹுவில் உள்ள எனது இசை அரங்கில் தான் இசை அமைத்தார் என்றார் சுக்வீந்தர் சிங்
‘ஜெய் ஹோ’ பாடலை வேறு படத்திற்காக உருவாக்கினார் ரகுமான். அந்தப் பாடல் கதைக்கு பொருந்தவில்லை என்பதால் அந்தப் பாடலை ரகுமான் பயன்படுத்தவில்லை என்று சுக்வீந்தர் சிங் குறிப்பிட்டார்.
“ பாடல் நன்றாக இருந்ததால், அங்கிருந்த பாடலாசிரியர் குல்சாரிடம் நான் பாடினேன். பின்னர், அதை ஏ.ஆர்.ரகுமானுக்கு அனுப்பினேன். அதை டேனி பாய்லுக்கு அனுப்பினார் ரஹ்மான். இதுதான் நடந்தது. ராம் கோபால் வர்மாவுக்குத் தவறான தகவல் கிடைத்திருக்கும்,” என்று சுக்விந்தர் சிங் தெரிவித்தார்.