தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளனர்.
நடிகர் அஜித் எப்போதும் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நின்று வாக்குப் போடுவது வழக்கம். நேற்றும் அவர் அந்த வழக்கத்தை மாற்றாமல் திருவான்மியூர் பகுதி வாக்குச்சாவடிக்கு காலையிலேயே முதல் ஆளாக வாக்கு அளிக்கச் சென்றார். அவர் வாக்களிக்கச் சென்றபோது, சிறிது நேரம் காத்திருக்குமாறு வாக்குச்சாவடி ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர்.
வாக்களிப்பை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முடிவடையும் முன்பே அஜித் அங்கு சென்றுவிட்டார். இதையடுத்து அங்கிருந்த மேசையில் அவர் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். திருவான்மியூரில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு காலையில் முதல் ஆளாக வந்து ஓட்டளித்த பெருமை அஜித்தையேச் சேரும்.
நடிகர் ரஜினிகாந்த் வழக்கம்போல் இம்முறையும் தனது வீட்டுக்கு அருகே உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசுக் கல்லூரியில் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையாற்றினார்.
நடிகர் தனுஷ் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்களிப்பு மையத்திற்கு தனது காரை தாமே ஓட்டி வந்து வாக்களித்தார். அவரைப்போல ஐஸ்வர்யா ரஜினியும் அந்தப் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் நடிகர் விஜய் சேதுபதி தனது வாக்கைப் பதிவு செய்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார்.
நடிகர் விஜய் ரஷ்யாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அவர் வாக்களிப்பதற்காக சென்னைக்கு வர இருப்பதாக இரு நாள்களுக்கு முன்பு செய்தி வெளியானது. எனினும் காலை அவர் வாக்களிக்க வரவில்லை. சற்றே தாமதமானாலும் அவர் வாக்களிக்க வருவார் என்று ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், அவர் சாலி கிராமம் வாக்களிப்பு மையத்துக்குச் சென்று வாக்களித்தார். அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் அவர் வாக்களித்த முதல் தேர்தல் இது.
தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர் சுந்தர்.சி, தனது மனைவி குஷ்பு, மகள்களுடன் வந்து வாக்களித்தார்.
நடிகரும் அமைச்சருமான உதயநிதி தனது மனைவியும் இயக்குநருமான கிருத்திக்கா உதயநிதியுடன் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார்.
சென்னை, தி.நகர் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் இயக்குநர் பாரதிராஜாவும் அவரது மகனும் நடிகருமான மனோஜ் ஆகியோர் வாக்களித்தனர்.
நடிகை குஷ்பு தனது கணவர், இயக்குநர் சுந்தர் சி மற்றும் இரு மகள்கள் உடன் சென்னை, பட்டினம்பாக்கத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் வாக்களித்தார்.
சரத்குமார் ராதிகாவை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஓட்டுச் சாவடிக்குச் சென்று வாக்களித்தார். அவருடன் அவர் மகள் வரலெட்சுமியும் வாக்களித்தார்.
இவர்களைத் தவிர மேலும் பல திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.