ஒவ்வொரு நாள் பொழுதையும் உற்சாகத்துடன் தொடர மூச்சுப் பயிற்சியும் தியானமும் மிகப் பெரிய அளவில் பயன் நல்கும் என்கிறார் நடிகை சமந்தா. தான் மறவாமல் தினமும் இதனைக் கடைப்பிடித்து வருவதாகவும் சொல்கிறார்.
இதுகுறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்துள்ள நேர்காணலில், “நான் தினமும் காலை 5.30 மணி அளவில் படுக்கையில் இருந்து எழுந்துவிடுவேன். சூரிய உதயம் வரும் வரை தியானமும் மூச்சுப் பயிற்சிகளையும் செய்வேன்.
“எனது தியானப் பயிற்சி அரை மணி நேரத்துக்கு தொடரும். இந்தப் பயிற்சிகள் எனது ஒவ்வொரு நாள் பொழுதையும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கழிக்க பெரிதும் உதவுகின்றன, இதன்மூலம் எனக்கு அதிக சக்தி கிடைக்கிறது,’’ என்கிறார்.
தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் கடந்த 10 ஆண்டுகாலமாக முன்னணி நாயகியாக நடித்து வரும் சமந்தாவுக்கு இடையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன.
காதலித்து திருமணம் செய்துகொண்ட தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து அவரைவிட்டுப் பிரிந்தார். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் உடல்நலன் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதையும் தற்காலிகமாக நிறுத்தினார். சிலகாலம் நோய்க்கான சிகிச்சை பெற்றவர், இப்போது இப்பாதிப்பில் இருந்து குணமடைந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.