இன்று இந்திய அளவில் இளையர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் கனவுக் கன்னியாக உருவெடுத்து வருகிறார் நடிகை திருப்தி திம்ரி.
அண்மையில் வெளியீடு கண்ட ‘அனிமல்’ திரைப்படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரம் இவருக்கு இதுவரை இல்லாத புகழைத் தேடித்தந்துள்ளது.
அந்த அளவுக்கு திருப்தி திம்ரியின் அழகு இளையர்களை அவர் பக்கம் சுண்டி இழுத்துள்ளது. அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தயார் என்று கூறும் இவர், கதைக்கு ஏற்ற கவர்ச்சி என்றால் தயக்கமின்றி அத்தகைய காட்சிகளில் நடிக்கத் தயார் என்கிறாராம்.
“நான் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவள். 29 வயதாகிறது. பள்ளிப்படிப்பை பிறந்த ஊரில் முடித்த பிறகு டெல்லியில் சோஷியாலஜி துறையில் பட்டப்படிப்பை முடித்தேன்.
“அந்தக் காலகட்டத்தில் எப்படியாவது நடிகையாகி விட வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி, வலுத்துக்கொண்டு இருந்தது. பட்டப்படிப்பு முடிந்த கையோடு நடிகையாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு புனே நகரில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்புப் பயிற்சி பெற்றேன்,” என்கிறார் திருப்தி திம்ரி.
பயிற்சியை முடித்து பல கனவுகளோடு திரைப்படக் கல்லூரியில் இருந்து கிளம்பியவருக்கு திரைத்துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் திம்ரியின் பார்வை மாடலிங் துறையின் மீது பதிந்தது.
ஏற்கெனவே விளம்பரங்களில் நடிக்குமாறு தேடி வந்த வாய்ப்புகளை நிராகரித்து இருந்தாராம். ஆனால் மீண்டும் அத்தகைய வாய்ப்பு கிடைத்ததும் இறுகப் பற்றிக்கொண்டுள்ளார்.
“விளம்பரப் படங்களில் நடித்ததன் மூலம் இளையர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகிவிட்டேன். அதன் பிறகு 2017ல் ‘போஸ்டர் பாய்ஸ்’ என்ற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். நல்ல படம் என்றாலும் பெரிதாக பேசப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார்,” திருப்தி திம்ரி.
இச்சூழ்நிலையில் 2018ஆம் ஆண்டு காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ இந்திப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் திருப்தி. இறுதியில் 2018ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் விருப்பத்திற்கேற்ப முழுநீள கதாநாயகியாக ’லைலா மஜ்னு’ இந்திப் படத்தில் நடித்தார்.
“அந்தப் படத்திற்கான நடிப்புத் தேர்வில் என்னை நிராகரித்துவிட்டனர். எனினும், பிறகு அந்தப் படத்தில் நடித்தேன். ஒரு வேளை அந்த வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் நான் திரை உலகில் நீடித்து இருப்பேனா என்பது எனக்கே தெரியவில்லை,” என்கிறார் திருப்தி திம்ரி.
திரை உலகில் நிலவும் மறைமுகப்போட்டி, கொரோனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து அமையவில்லை என்பது சோகம்தான்.
எனினும் ‘அனிமல்’ திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. ஒரே படத்தின் மூலம் நாடறிந்த நடிகையாகிவிட்டார்.
இந்நிலையில் தனக்கான வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறாராம்.
“எனது திரை உலக பயணத்தின் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறேன். அதனால் மனம் பக்குவப்பட்டுள்ளது. இனி ஏமாற்றங்கள், தோல்விகள் என்னை முடக்கிவிடாது.
“குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், கிடைத்த வாய்ப்புகளை வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளேன். அந்த வகையில் எனது கடமையை முறையாக நிறைவேற்றியுள்ளேன்,” என்று சொல்லும் திருப்தி திம்ரி, அடுத்து இந்தியில் ஆனந்த் திவாரி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது காதலும் நகைச்சுவையும் கலந்த கதையுடன் உருவாகிறது.
திருப்தி திம்ரிக்கும், தமிழ் திரை உலகத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்பவர்கள் அடுத்த இரு வரிகளை கவனமாக படிக்கவும்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறாராம் இந்த இளம் நாயகி. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தில் இவர் ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாகத் கூறப்படுகிறது.