காதல் திருமணத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளது என்கிறார் இளம் நாயகி அம்ரிதா ஐயர்.
‘பிகில்’ படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், ‘ஹனுமன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தை முதலில் தெலுங்கில் மட்டுமே தயாரிக்க திட்டமிட்டு இருந்தனராம். ஆனால் பட வேலைகளைத் தொடங்கியதும் தமிழ் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளில் தயாரிப்பது என முடிவு செய்திருக்கிறார்கள்.
அதன் பின்னர் இந்திய அளவில் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற படைப்பாக உருவாக்குவது எனத் திட்டம் மாறியதாம். இப்போது அனைத்துலக ரசிகர்களுக்கும் ஏற்ற திரைப்படமாக மாறியுள்ளது ‘ஹனுமன்’.
இது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பெருமையுடன் குறிப்பிடக்கூடிய படைப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக உருவாகி உள்ளது என்றும் சொல்கிறார் அம்ரிதா.
“சாதாரணமாக சுற்றித்திரியும் ஒரு இளைஞனுக்கு ஹனுமனின் சக்தி கிடைத்தால் என்னவாகும் என்பதுதான் இப்படத்தின் ஒரு வரிக் கதைச் சுருக்கம். இது ஆன்மிகப் படம் அல்ல. சிறார் முதல் பெரியோர் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்,” என்கிறார் அம்ரிதா.
தற்போது தமிழ், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் நாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருவதாகச் சொல்பவர், நிஜ வாழ்க்கையிலும் ஒரு விளையாட்டு வீராங்கனைதான். பள்ளி முதல் கல்லூரி காலம் வரை சிறந்த கூடைப்பந்து வீராங்கனையாக வலம் வந்துள்ளார்.
பள்ளி, கல்லூரியைப் பிரதிநிதித்து ஏராளமான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அந்த காலகட்டத்தில் படிப்பிற்கும் நடிப்பிற்கும் சரிசமமாக முக்கியத்துவம் கொடுத்ததாகச் சொல்கிறார் அம்ரிதா.
அது மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில்தான் முதன்முதலாக ஒரு மாணவரைப் பார்த்ததும் இவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாம்.
“ஒரு முறை முக்கியமான போட்டியில் பங்கேற்க வெளியூர் சென்றிருந்தேன். அங்கு அந்த மாணவரைச் சந்தித்தபோது அவரது ஊர், பெயர் என எந்தவிதமான விவரங்களும் தெரியாது.
“ஆனால் அவர் கூடைப்பந்து விளையாட்டில் அசத்தினார். அவரது அற்புதமான ஆற்றல் என்னைக் கவர்ந்தது. அவரும் என்னைக் கவர்ந்தார். அவ்வளவுதான் எனது காதல் அனுபவம்.
“அதன் பிறகு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இப்போதெல்லாம் இன்ஸ்டகிராமில் காதலைச் சொல்வதும் வாழ்க்கைத் துணையைத் தேடுவதும் சாதாரணமாகிவிட்டது.
“என்னுடைய வருங்கால கணவரைத் தேர்ந்தெடுக்க கால அவகாசம் உள்ளது. இன்னும்கூட எனது திரை வாழ்க்கையில் தொடக்கத்தில்தான் நிற்கிறேன்.
“நீண்ட தூரம் போக வேண்டியிருப்பதால் காதல், திருமணம் குறித்தெல்லாம் யோசிக்க முடியவில்லை,” என்று சொல்லும் அம்ரிதா, காதல் திருமணத்தில் நிறைய சாதகமான அம்சங்கள் இருப்பதாக நம்புகிறார்.
பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தில் பாதுகாப்பு இருப்பதாக சமூகம் நம்புகிறது என்று குறிப்பிடுபவர், தாம் அவ்வாறு நினைக்கவில்லை என்கிறார்.
“உண்மையான காதலில் தாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கும். அதே நேரம் தற்போது பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்களிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
“திருமணத்திற்கு முன்பே மணமக்கள் சில மாதங்கள் பேசிப்பழகிப் பார்த்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள அவகாசம் தருவது, பெற்றோர் மனதார அனுமதிப்பது வரவேற்கத்தக்க மாற்றம். இதனால் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்கள்கூட காதல் திருமணங்களாக மாறிவிடுகின்றன,” என்கிறார் அம்ரிதா.
முன்பெல்லாம் நடிகைகளின் தாய்மார்கள் விரைவில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவசரப்படுவார்கள் என்றும் இப்போது அத்தகைய மனப்போக்கு மாறியுள்ளது என்றும் அம்ரிதா கூறுகிறார்.
“அதே போல் ரசிகர்களின் ரசனையும் மாறிவிட்டது. இப்போதெல்லாம் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெரிதாக ஆராய்வதில்லை. நன்றாக நடித்தால்போதும் என்பது மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
“அதனால்தான் 20 ஆண்டுகளைக் கடந்தும்கூட சில நடிகைகள் தொடர்ந்து கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். அவர்களால் மேலும் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்க முடிந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை,” என்கிறார் அம்ரிதா.
‘ஹனுமன்’ திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்ட படைப்பாக உருவாகி உள்ளது. இதில் தேஜா சஜ்ஜா எனும் வளர்ந்து வரும் இளம் நாயகனுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார்.
மிக விரைவில் இவர் தமிழில் நடிக்கும் புதுப்படங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவருமாம்.