ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியீடு காண்கிறது.
இந்தப் படத்தில் சமத்துவம் குறித்து அலசியுள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர் கோகுல்.
மீனாட்சி சௌத்ரி, ஆன் ஷீத்தல் என படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர்.
“மீனாட்சியை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தபோது புதுமுகமாக வந்திருந்தார். ஆனால் ஒப்பந்தமான கையோடு தெலுங்கில் முன்னணி நாயகனாக உள்ள மகேஷ் பாபுவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
“அதையடுத்து விஜய் படத்திலும் ஒப்பந்தமாகி அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் இயக்குநர் கோகுல்.
கதிர் என்ற இளைஞனுக்கு சிகை அலங்காரத்தில் சாதிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதற்குள் பெரும் தடைகளைச் சந்திக்க நேரிடுகிறது. அவற்றையெல்லாம் உடைத்து எப்படி வெற்றி பெறுகிறான் என்பதை ‘சிங்கப்பூர் சலூன்’ படம் நகைச்சுவையாக விவரிக்குமாம்.
இந்தப் படத்தில் தாம் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்காக சில சிகை அலங்கார நிபுணர்களை சந்தித்து பேசி அவர்களுடைய உடல் மொழி, தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டாராம் பாலாஜி.
“கத்திரிக்கோலை கையால் எப்படிச் சுழற்றுவது, வாடிக்கையாளரை எப்படிப் பார்க்க வேண்டும், சிகை அலங்காரம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் எனப் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
“கொரோனா நெருக்கடி நேரத்தின்போது இந்தக் கதையை இயக்குநர் கோகுல் என்னிடம் கூறினார். எனக்கு பிடித்திருந்தது என்றாலும் உடனடியாக படவேலைகளைத் தொடங்க முடியவில்லை. எட்டு மாதங்களுக்குப் பிறகு கோகுல் மீண்டும் என்னைச் சந்தித்தபோது இந்தக் கதையுடன் என்னைப் பொருத்திப் பார்க்க முடிந்தது.
“பெரிய செலவில் உருவாகும் படம் என்பதால் முதலில் தயங்கினேன். தயாரிப்பாளர் நம்பிக்கையூட்டியதால் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன்,” என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.