“சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை எதையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டார். கதைக்கு என்ன தேவையோ அதை கொடுப்பதற்காக முழு அர்ப்பணிப்புடன் வேலை பார்ப்பார். திரைத்துறையின் மீது அவருக்கு அதீத விருப்பம் உள்ளது. அவர் இல்லை என்றால் அயலான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது,” என்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.
‘நேற்று இன்று நாளை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் இவர்.
அந்தப் படம் வெளியானதுமே இவரைத் தொடர்பு கொண்டு பேசினாராம் சிவகார்த்திகேயன். ‘நன்றாக இயக்கி உள்ளீர்கள் நாம் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றலாம்’ என்று கூறினாராம்.
“அவர் கேட்டுக்கொண்டதைப் போல் ஒரு நல்ல படைப்பை உருவாக்கிய மனநிறைவு உள்ளது. உண்மையைச் சொல்வதானால் இந்தப்படம் என் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றும் சொல்லலாம்.
“இன்றுள்ள சூழலில் ஒரு முன்னணி நாயகனிடம் இதுபோன்ற அறிவியல் பூர்வமான கதையைச் சொல்லி நடிக்க வைப்பது லேசுப்பட்ட விஷயமல்ல.
“சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை நட்புணர்வுடன் பழகுவார். ஒரு படத்தில் ஏதோ நடித்தோம் அந்த இயக்குநரை மறந்தோம் என்று கத்தரித்துக் கொண்டு போகக்கூடியவர் அல்ல.
“படப்பிடிப்புத் தளத்தில் வேலை பார்க்கும் கடைக்கோடி துணை நடிகர், தொழிலாளர் வரை அனைவருக்கும் என்ன தேவை என்பதை உற்றுக் கவனித்து உதவுவார், படக்குழுவை மிகக் கவனமாக வழிநடத்துவார்.
“ஒரு படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்படுவது இசையமைப்பாளர்தான். ஏ.ஆர்.ரகுமானிடம் கதை சொல்வதற்கு முதலில் தயங்கினேன். ஏனெனில் அவர் இணையும் பட்சத்தில் ‘அயலான்’ மேலும் பிரம்மாண்டமான படமாக உருவெடுக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவிடப்போகிறோமா என்ற யோசனை எழுந்தது.
“அவரை நேரில் சந்தித்தது, அவர் இசையமைக்க ஒப்புக்கொண்டது என்ன எல்லாமே கனவு போல் இருக்கிறது. இந்தப் படத்திற்காக அவர் ஏற்கெனவே இசையமைத்த பாடல்களை ஒதுக்கிவிட்டு இரண்டு புதுப் பாடல்களை கொடுத்துள்ளார்.
“தமது இசையில் புதுமையை தொடர்ந்து புகுத்தி வருகிறார். பின்னணி இசைக்கும் அதிகம் மெனக்கெட்டார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதில் சிற்சில மாற்றங்களைச் செய்வார்.
“முழுபடத்தையும் முதலில் பார்த்தது, பாராட்டியது அவர்தான். படத்தின் சில பகுதிகளில் காட்சியைவிட பின்னணி இசை மிக அருமையாக அமைந்துள்ளது.
“இப்படித்தான் ‘நேற்று இன்று நாளை’ படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி சிறப்பாக இசையமைத்து இருந்தார். நாம் பல ஆண்டுகளாக பார்த்துப் பார்த்துச் செதுக்கிய கதையை இசையமைப்பாளர்களால் எப்படி ஒரே நாளில் புரிந்துகொண்டு இசையமைக்க முடிகிறது என்பதை யோசிக்கும்போது வியப்பாக இருக்கும்.
“இந்தப் படத்தை தொடங்கியபோது ரகுல் ப்ரீத்சிங் முன்னணி நாயகியாக இருந்ததால் அவரை ஒப்பந்தம் செய்தோம். கருணாகரன் மீது எனக்கு எப்போதுமே ஒரு கண் இருக்கும். அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“அம்மா கதாபாத்திரத்தில் பானுப்பிரியாவும், மிக மாறுபட்ட எதிர்மறை கதாபாத்திரத்தில் இந்தி நடிகை இஷா கோபிகரும் நடித்துள்ளனர். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் இஷா கோபிகரை பார்த்திருக்க இயலாது.
“சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டதை அடுத்து யோகிபாபுவும் கோதண்டமும் எங்களுடன் இணைந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுக் கிரகவாசி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார் சித்தார்த். இதற்காக அவர் சல்லிகாசுகூட ஊதியம் வாங்கவில்லை.
“அவருக்கு வெறும் நன்றியை மட்டும் சொன்னால் போதாது. ஒரு தரமான படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று சொல்லி தாமாக முன்வந்து பின்னணிக் குரல் கொடுத்தார்.
“இதுபோன்ற உண்மையான கலைஞர்கள் அமைவது அரிது. இந்தப் படத்தில் வேற்றுக்கிரகவாசி சம்பந்தப்பட்ட காட்சிகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளோம்.
ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவங்களைத் தரும் என இப்போதே உறுதியளிக்க முடியும்,” என்கிறார் ரவிக்குமார்.
அயலான்’ படத்திற்காக தனது சம்பளத்தை சிவகார்த்திகேயன் விட்டுக் கொடுத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைவிட முக்கியமாக இப்படத்தின் வெளியீட்டு உரிமையை விற்பனை செய்வதிலும் அவர் பெரிதும் கைகொடுத்துள்ளார்.
அவரது இந்த அக்கறையை திரை உலகத்தினர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் தொடர்பான புது தகவல்களை சிவாவின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
படவெளியீட்டின் போது திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு இனிப்புகள் விநியோகிப்பது பிரம்மாண்டமான பதாகைகள் வைப்பது என சிவாவின் ரசிகர்கள் பலவிதமான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளனராம்.
ஆனால் பணத்தை வீண் அடித்து விடக்கூடாது என்று ரசிகர்களுக்கு சிவா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்.