கறுப்புத் தங்கம் காற்றோடு கலந்தது

சாமானியனாய் பிறந்து சரித்திரம் படைத்த சாதனை நாயகனாய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தனாய், மனம் கவர் நாயகனாய், மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவனாய் உருவெடுத்த ‘கேப்டன்’ விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையைத் தவிர இவரிடம் சிவப்பு நிறமில்லை, நாடகங்களில் நடித்த முன் அனுபவங்கள் இல்லை, சினிமா பின்புலமும் இல்லை.

ரஜினியைப்போல தன் புகைப்படங்களை தயார் செய்து அதை எடுத்துக்கொண்டு சென்னை வந்தவரிடம், “இங்குதான் ஒரு ரஜினி இருக்கிறாரே, அப்புறம் நீ எதுக்கு? ஊருக்குப் போய்ச் சேர்,” என்ற தயாரிப்பாளர்களின் வார்த்தைகளைக் கேட்டு அஞ்சவில்லை விஜயகாந்த்.

`சினிமாவைப் பிடிக்கும்’ என்றவொரு பின்புலத்தைத் தவிர இவரிடம் எந்தவித தகுதியும் இல்லை. ரஜினி - கமல் என்ற இரு கூர் வாள்களும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலம்.

சினிமாவில் இவரது வருகை, கமல், ரஜினி ரசிகர்களை உலுக்கியதோடு நில்லாமல், தனது தனித்துவ நடிப்பின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தையே திரட்டியது.

1980களில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 90, 1984ஆம் ஆண்டில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 18. 80களில் விஜயகாந்த் நடித்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை 13.

பல துன்பங்களைக் கடந்து சினிமாவுக்குள் நுழைந்த விஜயகாந்த், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், அருண் பாண்டியன் எனப் பல நடிகர்களையும் அறிமுகம் செய்துள்ளார்.

வெற்றி இயக்குநர்கள் அனைவரும் ரஜினி, கமல் என்று தேடி ஓட, சிறு இயக்குநர்கள் பலருக்கும் வாய்ப்பளித்துப் பல வெற்றிப் படங்களில் நடித்து அறிமுக இயக்குநர்கள் வளர வழிசெய்தார்.

1980ஆம் ஆண்டு முழுவதும் தமிழ் சினிமாவில் விஜயகாந்த் ராஜ நடை போட்டுவந்த காலம். 1991ல் `கேப்டன் பிரபாகரன்’ எனும் மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த பின் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இவரை `கேப்டன்’ என்று புகழ்பாடியது.

அதுமட்டுமின்றி கமல், ரஜினி, பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்குக்கூட அவர்கள் நடித்த 100வது படம் கைகொடுக்கவில்லை.

ஆனால், இவரின் 100வது படமான `கேப்டன் பிரபாகரன்’, வெள்ளி விழா கண்டு சாதனை புரிந்தது.

பல சாதனைகள் படைத்ததோடு ஓயாமல், நடிகர் சங்கத்தின் தலைவராகப் பதவியேற்று அங்கு நிகழ்ந்த சோதனைகளையும் தீர்த்து வைத்தார்.

1999லிருந்து 2004 வரை இவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். அந்தப் பொறுப்பில் இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த விஜயகாந்த், அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்துப் பல நாடுகளில் நட்சத்திர கலை விழாக்களை நிகழ்த்தி, அதில் வந்த தொகையை வைத்து நெடுங்காலமாகக் கட்ட முடியாத நடிகர் சங்கத்தின் கடனைக் கட்டி முடித்தார்.

விஜயகாந்துக்கு மிகவும் பக்கபலமாக நின்று கைகொடுத்தவர் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்.

விஜயகாந்தின் ஆரம்பக் காலத்து சினிமா வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை. பல அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்த விஜயகாந்துக்கு ஆறுதல் சொன்னதோடு நில்லாமல், `ராவுத்தர் ஃபிலிம்ஸ்’ என்றவொரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் அவர் படங்களைத் தயாரித்து, ஆபாவாணன், அரவிந்தராஜ், செல்வமணி, செந்தில்நாதன் போன்ற இயக்குநர்களைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்த 100க்கும் மேற்பட்டவர்களின் பசியையும் ஆற்றியது `ராவுத்தர் சினிமா கம்பெனி’.

`புலன் விசாரணை’ படத்தின் மூலம் சரத்குமார் என்ற இளைஞனையும் முதன்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டினார் விஜயகாந்த்.

ஐயப்பன் கோவிலுக்கு பதினெட்டு ஆண்டுகளாக விஜயகாந்த் செல்வதைப் பார்த்த ரசிகர்கள் அவரின் காலில் விழுந்து வணங்கத் தொடங்கினர். அதிலிருந்து அங்கு போவதையும் நிறுத்திக்கொண்டார் விஜயகாந்த்.

தொடக்கத்தில் அதிரடி நாயகனாக வலம் வந்த விஜயகாந்த், தன்னால் குணசித்திர வேடத்திலும் நடிக்க முடியும் என்பதை ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படத்தின் மூலம் நிரூபித்தார்.

அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற அதனைத் தொடர்ந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘தழுவாத கைகள்’, ‘ஊமை விழிகள்’ என்று இவருடைய படப்பட்டியல் தொடர்ந்தது.

நாயகனுக்கும் படக்குழவில் இருப்பவர்களுக்கும் ஒரே உணவு என்ற முறையை கொண்டு வந்தவர் விஜயகாந்த்.

அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டது.

தோற்றத்தில் கறுப்பு நிறமுடையவர்களும் தமிழ் திரையுலகில் வெற்றி பெற முடியும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் நிரூபித்தார்.

அவரைத் தொடர்ந்து திரையுலகில் கால் பதித்த விஜயகாந்த், ரஜினி, கமல் இருவருக்கும் இணையாக ஒருவர் வெற்றிகரமான கதாநாயகனாகவே பல ஆண்டுகள் உலா வரவும் முடியும் என்பதையும் தன் வாழ்நாளில் சாதித்து காட்டினார்.

ஒரு நடிகர் என்பதைத் தாண்டி அவரது தன்னார்வ பொதுநலத் தொண்டுகளின் காரணமாக லட்சக்கணக்கானவர்களால் விரும்பப்படும் மனிதராக வலம் வருவார் ‘கேப்டன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் விஜயகாந்த் என்கிறது கோலிவுட்.

செய்திகள்/ படங்கள்: தமிழக தகவல் சாதனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!