எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனியொருவனாக திரைத்துறையில் சாதனை புரிந்த விஜயகாந்த் நேற்று காலமானார்.
சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையைத் தவிர இவரிடம் சிவப்பு நிறமில்லை, நாடகங்களில் நடித்த முன் அனுபவங்கள் இல்லை, சினிமா பின்புலமும் இல்லை.
ரஜினியைப் போல தன் புகைப்படங்களை தயார் செய்து அதை எடுத்துக்கொண்டு சென்னை வந்தவரிடம், “இங்குதான் ஒரு ரஜினி இருக்கிறாரே, அப்புறம் நீ எதுக்கு? ஊருக்குப் போய்ச் சேர்,” என்ற தயாரிப்பாளர்களின் வார்த்தைகளைக் கேட்டு அஞ்சவில்லை விஜயகாந்த்.
`சினிமாவைப் பிடிக்கும்’ என்றவொரு பின்புலத்தைத் தவிர இவரிடம் எந்தவித தகுதியும் இல்லை. ரஜினி - கமல் என்ற இந்த இரு கூர் வாள்களும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலம்.
சினிமாவில் இவரது வருகை, கமல், ரஜினி ரசிகர்களை உலுக்கியதோடு நில்லாமல், தனது தனித்துவ நடிப்பின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தையே திரட்டியது.
1980களில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 90, 1984ஆம் ஆண்டு மட்டும் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 18. 80களில் விஜயகாந்த் நடித்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை 13.
பல துன்பங்களைக் கடந்து சினிமாவுக்குள் நுழைந்த விஜயகாந்த், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், அருண் பாண்டியன் எனப் பல நடிகர்களையும் அறிமுகம் செய்துள்ளார்.
குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்ததைப்போல், பல அற்புதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறார் விஜயகாந்த்.
வெற்றி இயக்குநர்கள் அனைவரும் ரஜினி, கமல் என்று தேடி ஓட, சிறு இயக்குநர்கள் பலருக்கும் வாய்ப்பளித்துப் பல வெற்றிப் படங்களில் நடித்து அறிமுக இயக்குநர்கள் வளர வழிசெய்தார்.
1980ம் ஆண்டு முழுவதும் தமிழ் சினிமாவில் விஜயகாந்த் ராஜ நடை போட்டுவந்த காலம். 1991ல் `கேப்டன் பிரபாகரன்’ எனும் மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த பின் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இவரை `கேப்டன்’ என்று புகழ்பாடியது.
அதுமட்டுமின்றி கமல், ரஜினி, பிரபு, கார்த்திக், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்குக்கூட அவர்கள் நடித்த 100வது படம் கைகொடுக்கவில்லை.
ஆனால், இவரின் 100வது படமான `கேப்டன் பிரபாகரன்’, வெள்ளி விழா கண்டு சாதனைப் புரிந்தது. பல சாதனைகள் படைத்ததோடு ஓயாமல், நடிகர் சங்கத்தின் தலைவராகப் பதவியேற்று அங்கு நிகழ்ந்த சோதனைகளையும் தீர்த்து வைத்தார்.
1999லிருந்து 2004 வரை இவர்தான் நடிகர் சங்கத்தின் தலைவர். அந்தப் பொறுப்பில் இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த விஜயகாந்த், அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்துப் பல நாடுகளில் நட்சத்திர கலை விழாக்களை நிகழ்த்தி, அதில் வந்த தொகையை வைத்து நெடுங்காலமாகக் கட்ட முடியாத கடனைக் கட்டி முடித்தார்.
விஜயகாந்துக்கு மிகவும் பக்கபலமாக நின்று கைகொடுத்தவர் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்.
விஜயகாந்தின் ஆரம்பக் காலத்து சினிமா வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாக அமையவில்லை. பல அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்த விஜயகாந்துக்கு ஆறுதல் சொன்னதோடு நில்லாமல், `ராவுத்தர் ஃபிலிம்ஸ்’ என்றவொரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதில் அவர் படங்களைத் தயாரித்து, ஆபாவாணன், அரவிந்த்ராஜ், செல்வமணி, செந்தில்நாதன் போன்ற இயக்குநர்களைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்த 100க்கும் மேற்பட்டவர்களின் பசியையும் ஆற்றியது `ராவுத்தர் சினிமா கம்பெனி’.
`புலன் விசாரணை’ படத்தின் மூலம் சரத்குமார் என்ற இளைஞனையும் முதன்முதலாகத் தமிழ் சினிமாவுக்கு அடையாளம் காட்டினார் விஜயகாந்த்.
ஐயப்பன் கோவிலுக்கு பதினெட்டு ஆண்டுகளாக விஜயகாந்த் செல்வதைப் பார்த்த ரசிகர்கள் அவரின் காலில் விழுந்து வணங்கத் தொடங்கினர். அதிலிருந்து அங்கு போவதையும் நிறுத்திக்கொண்டார் விஜயகாந்த்.