திரை உலகில் ஒரு சிலரால் சாதிய பாகுபாடு நிலவுவதாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் கிரண் துரைராஜ்.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நவயுக கண்ணகி’ திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் விமல்குமார் நாயகனாகவும் பவித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய கிரண் துரைராஜ், தமிழர்கள் எங்கிருந்தாலும் அங்கு சாதி அமைப்பு களும் இருக்கும் என்றார்.
“நான் பெங்களூரு தமிழன். அங்கிருந்தபோது சாதிப் பாகுபாடு குறித்து ஒன்றும் தெரியவில்லை. அங்கு கன்னடர், தமிழர் என்ற வித்தியாசம் மட்டுமே இருந்தது. ஆனால் தமிழகம் வந்த பிறகுதான் சாதியை உணர்ந்தேன்.
“சினிமாவுக்காக சென்னை வந்தபோது இங்கு சாதிப் பாகுபாடு இருந்ததாகச் சொல்ல மாட்டேன். ஆனால் சினிமாவில் சாதி பார்க்கிறார்கள்.
“தமிழ்த் திரை உலகைச் சேர்ந்த ஒருவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசினால் கூட போதும், அதற்குள் நாம் என்ன சாதி என்பதை நம்மையே அறியாமல் சொல்லி விடுவோம். அந்த அளவிற்கு நேர்த்தியாகப் பேசி விவரங்களைச் சேகரிப்பார்கள்.
“என் சாதி குறித்து சொல்லலாமா வேண்டாமா என்பதுகூட தொடக்கத்தில் எனக்கு தெரியாது.
“ஆனால் நான் என்ன சாதி என்பதை அறிந்தவர்கள் அவர்கள் விரும்பிய கோணத்தில் என்னைப்பற்றி சித்திரிக்க தொடங்கினர்.
“எனவேதான் என்னுடைய முதல் படத்திலேயே சாதிப் பிரச்சினையைக் கையாண்டுள்ளேன். இனி அடுத்தடுத்து வரும் எனது படைப்புகளிலும் என் மனதைப் பாதித்த உண்மைச் சம்பவங்களையே காட்சிப்படுத்துவேன். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அலசுவதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை,” என்கிறார் கிரண் துரைராஜ்.