தீபாவளி, பொங்கல் என்றாலே தமிழ் சினிமா ரசிகர் களுக்குக் கொண்டாட்டம்தான். முன்னணி கதாநாயகர்களின் புதுப்படங்கள் வெளியீடு காண வரிசைக் கட்டி நிற்பதே இதற்குக் காரணம்.
எதிர்வரும் 2024 பொங்கல் பண்டிகையையொட்டி வெளிவரும் படங்கள் குறித்து சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
ரஜினி நடித்துள்ள ‘லால் சலாம்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சுந்தர் சி.யின் ‘அரண்மனை 4’ ஆகிய நான்கு படங்கள் பொங்கல் சமயத்தில் ரசிகர்களை மகிழ்விக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இப்பட்டியலில் இருந்து ஒன்றிரண்டு படங்கள் வெளியேறக்கூடும் என்றும் புதுப்படங்கள் சேர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘அயலான்’ படம் தீபாவளி சமயத்திலேயே வெளியீடு கண்டிருக்க வேண்டும். தொழில்நுட்பப் பணிகளில் ஏற் பட்ட தாமதத்தால் பொங்கல் போட்டியில் களம் இறங்குகிறது.
முன்னதாக ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் பொங்கல் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. இப்போது அப்படத்தின் வெளியீட்டை ஜனவரி 26ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.
‘அயலான்’ படத்தில் வேற்றுக்கிரகவாசி கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது, அக்கதாபாத்திரம் திரையில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அதனால் தான் படம் வெளியீடு தாமதம் ஆனதாம்.
தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். நடப்பு டிசம்பர் இறுதிக்குள் இப்படம் வெளியாகி இருக்க வேண்டும்.
எனினும் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’, ‘தங்கலான்’ ஆகிய இரு முக்கியமான படங்களின் வெளியீடு தள்ளிப்போனதால் தனுஷ் படத்தை பொங்கல் வெளியீடு என அறிவித்துவிட்டனர்.
சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் போராளியைப் பற்றிய கதையாக இப்படம் உருவாகி உள்ளது என்றும் 1930களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு என்றும் ‘கேப்டன் மில்லர்’ குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனுஷ் இதில் பல தோற்றங்களில் வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது.
தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள் ளது. எனினும் சில காட்சிகளை மீண்டும் படம் பிடிக்க வேண்டியுள்ளதால் பட வெளியீடு தாமதமாவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘அரண்மனை 4’ படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைத்துள்ளார். ‘அரண்மனை’ படத்தின் முதல் மூன்று பாகங்களும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன.
எனவே நான்காவது பாகமும் அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் அதிகம் மெனக்கெட்டு வருகிறார் சுந்தர். சி.
இப்படத்தில் சுந்தர்.சி. நாயகனாக நடிக்க தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திகில், பேய்க் கதை என்பதால் படத்தில் கணினி தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.
எனினும் சுந்தர்.சிக்கு சில காட்சிகள் மனநிறைவைத் தரவில்லையாம்.
எனவே தொழில்நுட்பப் பணிகள் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எனவே பட வெளியீடும் தாமதமாகிறது.