இளம் வயதிலேயே ஒரு குழந்தைக்குத் தாயாக நடிப்பதை பெரும்பாலான கதாநாயகிகள் விரும்புவதில்லை.
ஆனால், ‘காக்கா முட்டை’ படத்தில் அத்தகைய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் வழியில் இப்போது ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் மூலம் இளம் வயது அம்மாவாக நடித்து பெயர் வாங்கி உள்ளார் நடிகை மஹானா சஞ்சிவி.
“காக்கா முட்டை’ படத்திற்குப் பிறகு பள்ளி மாணவி, கல்லூரி மாணவி எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
“அவரது வெற்றியைத்தான் நான் உன்னிப்பாக கவனிக்கிறேன். இயக்குநர் தங்கர்பச்சான் என்னிடம் அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது சற்றே படபடப்பாக இருந்தது என்பதை தயக்கமின்றி ஒப்புக்கொள்வேன்.
“அதே சமயம் என் திறமைக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதாகவும் உணர்ந்தேன். ‘வெறும் காதல் பாட்டுகளில் நடனமாடி, கவர்ச்சி காட்டி ரசிகர்களைக் கவர்ந்துவிட முடியாது.
“சவாலான கதாபாத்திரங்களில் நடித்தால் மட்டுமே காலத்தால் அழிக்க முடியாத பெயரையும் புகழையும் பெற முடியும்’ என்று தங்கர்பச்சான் அறிவுரை கூறினார். அதன் பிறகுதான் துணிச்சல் வந்தது.
“கமல்ஹாசன் ‘16 வயதினிலே’ படத்தில் கோவணத்துடன் நடித்தார். அது அவரது ஆளுமையை வெளிப்படுத்தியது. கமலைப்போல் நானும் பரமக்குடி ஊரைச் சேர்ந்தவள். எனவே, அவரைப் போல் நானும் என்னைத் தேடி வந்த சவாலை ஏற்றுக் கொண்டேன்,” என்கிறார் மஹானா சஞ்சிவி.
சந்தானம் நடித்த ‘ஏ ஒன்’ படம்தான் தமிழ் சினிமாவில் இவரை அறிமுகப்படுத்தியது. அப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த போதுதான் தங்கர்பச்சான் படத்திற்கான அழைப்பு வந்ததாம்.
யதார்த்தமான நடிப்பு, தமிழ் பேசும் நடிகை என்பன உள்ளிட்ட அம்சங்கள்தான் தமக்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததாகச் சொல்கிறார்.
“தங்கர் சாருக்கு என் நடிப்பும் தமிழும் பிடித்திருந்தது. அவரது இயக்கத்தில் பாராதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு உள்ளிட்ட ஆளுமைகளுடன் இணைந்து நடித்தது எனக்கு கிடைத்த வரம்.
“இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனது புகைப்படத்தை ஓவியமாகத் தீட்டிப் பரிசளித்ததுடன், ‘அர்ப்பணிப்பின் அரசி’ என்ற விருதையும் அளித்தனர். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்.
“இந்த விருதுக்குப் பின்னர் மேலும் நம்பிக்கையுடன் நடைபோட்டு வருகிறேன்,” என்கிறார் மஹானா.
அடுத்து இயக்குநர் கோபி நயினார் இயக்கும் ‘காலணி’ படத்தில் இவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இது மண்சார்ந்த வாழ்வியலைப் பதிவு செய்யும் படைப்பாக இருக்கும் என்றும் தனது கதாபாத்திரத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்.
கதைப்படி, இவரது கதாபாத்திரம் உடல் மெலிந்து காணப்பட வேண்டுமாம். இதற்காக தீவிர உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என பல நாள்கள் மெனக்கெட்டதாகச் சொல்கிறார்.
தமிழ்த் திரையுலகில் தமிழ்ப் பெண்களுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கின்றனவா என்ற கேள்விக்கு மஹானாவின் பதில் தயக்கமின்றி வெளிப்படுகிறது.
“தமிழ்த் திரையுலகத்தில்தான் இப்படியொரு கேள்வியைக் கேட்கும் சூழல் நிலவுகிறது. மலையாளம், கன்னடம், தெலுங்கு திரையுலகங்களில் அந்தந்த மொழிகளைப் பேசும் பெண்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
“இந்தியிலும்கூட இதுதான் நிலைமை. ஆனால் தமிழில் மட்டுமே பிற மொழிகளை பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு அளித்துவிட்டு கடைசியாகத் தமிழ் பேசும் பெண்களை நடிக்க வைக்கிறார்கள்.
“எனக்குத் தெரிந்தவரை தமிழ் பெண்களும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். அவர்களிடமும் திறமை குவிந்துள்ளது.
“எனவே அந்தத் திறமையை வெளிப்படுத்த அவர்களுக்கும் உரிய வாய்ப்புகளை அளிக்க வேண்டும். அப்போதுதான் தரமான படைப்புகள் உருவாகும். இதுவே எனது வேண்டுகோள்,” என்கிறார் இளம் நாயகி மஹானா சந்தீப்.