‘சர்க்கரை நிலவே’, ‘மெல்லினமே மெல்லினமே’, ‘அன்பே என் அன்பே’ எனத் தொடங்கும் பல்வேறு பாடல்கள் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் பின்னணிப் பாடகர் ஹரிஷ் ராகவேந்தரா.
இதுவரை 3,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
நீண்ட நாள்களாக எந்தப் படத்திலும் இவரது குரல் ஒலிக்கவில்லை. இந்நிலையில், தனது அடுத்தகட்ட திட்டங்கள், எதிர்பார்ப்புகள் குறித்து விகடன் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் ஹரிஷ்.
“18 வயதிலேயே பாடத் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகள் பரபரப்பாக இயங்கி வந்தேன். ஒரு கட்டத்தில் எல்லாவற்றில் இருந்தும் விலகி நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
“அத்தகைய இடைவேளைக்காகவே அமெரிக்காவில் வசிக்க முடிவெடுத்தேன். இந்த முடிவால் எனக்குத் தெரியாத பல இசை வடிவங்களை அமெரிக்காவில் கற்றுக்கொள்ள முடிந்தது.
இசையமைப்பாளராக என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள இந்த இடைவேளை உதவிகரமாக இருந்தது. இப்போதும் சில இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.
“அமெரிக்காவில் இருந்தபடியே சில பாடல்களையும் பாடி வருகிறேன். நான் முறையாக இசை கற்றுக்கொள்ளவில்லை.
“இளையராஜா, டிஎம்எஸ், யேசுதாஸ், எஸ்.பி.பாலா, ஜானகி, சித்ரா ஆகியோருடைய பாடல்களைக் கேட்டுத்தான் எனது இசைத்திறனை வளர்த்துக்கொண்டேன்.
“கல்லூரியில் படித்தபோது ஏராளமான பாட்டுப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளேன். அதனால் சினிமாவில் பாட முயற்சி செய்யுமாறு நண்பர்களும் ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தினர்.
“தெலுங்கு திரையுலகில் பாடகனாக அறிமுகமாகி பின்னர் இசையமைப்பாளர் வித்யாசாகர் அளித்த வாய்ப்புகள் மூலம் தமிழ்ப் படங்களிலும் நல்ல பாடல்களைப் பாடி பெயர் வாங்கினேன்.
“18 வயதுகூட நிரம்பாத எனக்கு வாய்ப்பளித்தார் வித்யாசாகர். பின்னர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘மின்னலே’ திரைப்படம் என் திரைப் பாதையை மாற்றி அமைத்தது.
“கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே ‘பாரதி’ படத்திற்காக இளையராஜா இசையில் ‘நிற்பதுவே, நடப்பதுவே’ பாடலைப் பாடினேன்.
“அப்போது என் பெயர் வெறும் ஹரிஷ்தான். இளையராஜாதான் ஹரிஷ் ராகவேந்திரா என்று பெயரை மாற்றி அமைத்தார். ரசிகர்கள் மனதிலும் இந்தப் பெயர் பதிந்துவிட்டது. எனது தமிழ் உச்சரிப்பு நன்றாக இருப்பதாகவும் பாராட்டினார்.
“தமிழில் நான் பாடிய ‘சர்க்கரை நிலவே’ பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் பாடலைக் கேட்டுத் திருமணம் செய்து கொண்டதாக பலர் என்னிடம் கூறி உள்ளனர். அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.
“நடிகை ஜோதிகாவிற்கு இந்தப்பாடல் மிகவும் பிடிக்கும். என்னைச் சந்திக்கும் போதெல்லாம் அந்தப்பாடலை பாடிக்காட்டுங்கள் என்று அன்பு கோரிக்கை விடுப்பார்.
“இளம் இசையமைப்பாளர்கள் பலரை உன்னிப்பாகக் கவனிக்கின்றேன். அனிருத், சுந்தரமூர்த்தி, சைமன் கிங், அரோல் கரோடி, சந்தோஷ் தயாநிதி எனப் பலரையும் கவனிக்கிறேன்.
“அருமையான பாடல்களைக் கேட்கும்போது நடிகர் வடிவேலு சொல்வது போல் எனக்கு ஓய்வே கிடையாது எனச் சொல்லத் தோன்றுகிறது,” என்கிறார் ஹரிஷ் ராகவேந்திரா.