பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது சொந்த ஊரில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து சமூக ஊடகத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் நேரில் சென்று உதவி வருகிறார்.
தன்னால் இயன்ற உதவியை களத்தில் இறங்கி செய்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டுகள் ஒருபக்கம் குவிந்து வரும் நிலையில் மறுபக்கம் அவதூறுகளும், விமர்சனங்களையும் ஒரு தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள்.
இது குறித்து தழிழக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புளியங்குளத்தில் என்னுடைய பெற்றோரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் படகு மூலம் செல்லக்கூடிய இடங்களுக்கு சென்றோம். சேதம் அதிகமாக உள்ளது. சுற்றிலும் தண்ணீர் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதே மக்களுக்கு தெரியவில்லை” என்று கூறினார்.
இதனிடையே திருநெல்வேலியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடச் சென்றபோது, மாரி செல்வராஜும் அவருடன் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில், இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மாரி செல்வராஜ் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என்று பதிவிட்டுள்ளார்.
“வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது,” என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் சமூக ஊடகத்தில் கவலை தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
சமூக நீதிக் கருத்துகளையும், மக்களுக்கு எதிரான கொடுமைகளையும் தனது அழுத்தமான கதைகளின் மூலம் திரைப்படங்களாக்கியவர் மாரி செல்வராஜ்.