புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதைப் பெருமையாக கருதுவதாகச் சொல்கிறார் நடிகர் அசோக் செல்வன்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் அறிமுகமான அசோக் செல்வன் இன்று நல்ல நடிகர், தரமான படைப்புகளில் நடிக்க விரும்பும் நடிகர் எனப் பெயரெடுத்துள்ளார்.
இவரது நடிப்பில் உருவான ‘போர் தொழில்’ நல்ல படைப்பு என்று பெயரெடுத்ததுடன் நிற்காமல் வசூல் ரீதியிலும் சாதித்துக் காட்டியுள்ளது.
“எனது படங்கள் வசூல் ரீதியில் சாதிப்பதை மிகப்பெரும் வெற்றியாகக் கருதுகிறேன். அதே சமயம் எனது படம் ஒருவரது வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினால் எனது மகிழ்ச்சி பன்மடங்காக அதிகரிக்கிறது.
“இன்னொருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவனாக இருப்பதை விரும்புகிறேன்,” என்கிறார் அசோக் செல்வன்.
தனது நடிப்புப் பயணம் தொடங்கி பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இப்போதுதான் அந்தப் பயணம் தொடங்கியதாக எண்ணத் தோன்றுகிறது என்றும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற நடிப்புப் பசி தம்மிடம் எள்ளளவும் குறையவில்லை என்றும் கூறுகிறார்.
“திரைத்துறையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டும் அல்ல, எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறேன்.
“நேரம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காது. இப்போது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் இடையே ஒருவித சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டுள்ளேன்.
“அறிமுக இயக்குநர்களுக்கு நான் முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறுகின்றனர். ‘சபாநாயகன்’ படத்தின் இயக்குநரும் புதுமுகம்தான். இதைப் பெருமையாக கருதுகிறேன்.
“என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எத்தகைய நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலில் கவனிப்பேன். அவர்களுடைய இலக்கு வெற்றிப் படமா அல்லது நல்ல படமா என்பதை அறிய முயற்சி செய்வேன்.
“ஏனெனில் இவை இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். படத்தை நம்மால் வெற்றி பெறச் செய்ய இயலாது.
“ஒரு நல்ல படத்தை உருவாக்கிவிட்டு அது வெற்றி பெறுவதற்காக காத்திருப்பதுதான் சரி. பெரும்பாலும் நல்ல படங்கள் வெற்றி பெற்றுவிடும்.
“ஒரு கதை எழுதப்படும் மொழி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே போன்று காட்சி மொழியும் மிகவும் முக்கியமானது. தமிழ்த் திரையுலகில் பெரும்பாலான இயக்குநர்கள் கதாசிரியர்களாகவும் உள்ளனர்.
“எனினும் நல்ல எழுத்தாளர்கள் அனைவருமே நல்ல இயக்குநர்கள் என்று கூறிவிட முடியாது. எனவே நமக்கு ஏற்ற இயக்குநர்களை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்,” என்கிறார் அசோக் செல்வன்.
இந்தியத் திரையுலகம் கதாநாயகர்களை முன்னிலைப்படுத்தி செயல்படுவதை தாம் ஒப்புக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள இவர், இத்தகைய நிலை மாற வேண்டும் என்கிறார்.
ஒரு படத்திற்கான சந்தை மதிப்பு என்பது அதன் உருவாக்கம், கதைக்களம் உள்ளிட்ட அம்சங்களைச் சார்ந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் இந்திய திரைப்பட சந்தையானது கதாநாயகர்களை மட்டுமே நம்பியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
“ஒரு கதை தயாரானவுடன் உடனடியாக அதில் நடிக்கவுள்ள கதாநாயகனின் சந்தை மதிப்பு என்ன என்பதைத்தான் பார்க்கிறோம்.
“உதாரணமாக, ஒரு கதைக்கு முப்பது கோடி ரூபாய் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஒருவேளை குறிப்பிட்ட கதாநாயகன், கதாநாயகனின் ஊதியம் திட்டமிட்ட பட்ஜெட்டிற்கு ஏற்ப இல்லை என்றால் அப்படத்தில் நடிக்கக்கூடியவர்கள் மாறக்கூடும்.
“அதேபோல் ஒரு கதைக்கேற்ற தயாரிப்புத்தரப்பு அமைவதும் முக்கியம். அடுத்த ஆண்டு ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க உள்ளேன். அதற்கு பெரிய தொகையைச் செலவிட வேண்டியிருக்கும்.
“ஒரு வெற்றிப்படத்தில் நடித்து முடித்த பிறகு ராணுவக் கதையைக் கையில் எடுக்கலாம் எனக் காத்திருந்தேன். ‘போர் தொழில்’ படத்திற்குப் பிறகு என் மனதில் மாற்றம் எற்பட்டுள்ளது. அந்த ராணுவக் கதையில் இயன்ற விரைவில் நடிக்க உள்ளேன்,” என்கிறார் அசோக் செல்வன்.