நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துள்ளார்.
திருமணம் திருநெல்வேலியில் புதன்கிழமை நடந்ததாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
திருமணம் குறித்த படங்களையும் தம்பதி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.
அவர் ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கி ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்நிலையில, இவர்கள் திருமணம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது.
இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுப்பட்டியலும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இருட்டுக்கடை அல்வா, இளநீர் ‘புட்டிங்’, நார்த்தங்காய் இஞ்சி பச்சடி, வெண்டைக்காய் தயிர் பச்சடி, மரவள்ளிக் கிழங்கு வடை, பருத்திப்பால் பாயாசம், பீட்ரூட் சந்தகை, வாழக்காய் பூரி, ராகி அடை, திணை பொங்கல், நெல்லிக்காய் சட்னி, கொள்ளு சட்னி போன்ற உணவுகள் அந்தப் பட்டியலில் இருந்தன.