கடந்த வாரயிறுதியில் ஈரான் நடத்திய முன்னெப்போதும் இல்லாத வானூர்தித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலியத் தாக்குதல்களின் தாக்கத்தை ஈரானிய ஊடகங்கள் குறைத்து மதிப்பிட்டதால், ஆரம்பத்தில் ஏறிய கச்சா எண்ணெய் விலை பின்னர் சற்று குறைந்தது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணியளவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.3 விழுக்காடு உயர்ந்து US$88.20ஆக இருந்தது.
முன்னதாக, கச்சா எண்ணெய் விலை 3 விழுக்காடு உயர்ந்து ஒரு பீப்பாய் US$90க்கும் அதிகமாக இருந்தது.
அமெரிக்க வெஸ்ட் டெக்சஸ் இண்டர்மிடியட் (டபிள்யூடிஐ) 1.4 விழுக்காடு உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு US$83.87ஆக இருந்தது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் அந்த அறிக்கைகளை மறுத்தது. மேலும், இஸ்ஃபாஹான் அணுசக்தி நிலையம் பாதுகாப்பாக இருந்ததாக அது கூறியது.