வாஷிங்டன்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராகக் கூடுதல் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தக்கூடாது என்று அவை கேட்டுக்கொண்டுள்ளன. அவ்வாறு செய்தால் காஸா போரால் ஏற்கெனவே பேரளவில் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நிலைகுலைந்துவிடும் என்ற கவலை மேலோங்கி இருக்கிறது.
இஸ்ரேலின் கோபத்தைச் சற்று தணிக்க ஈரான் மீது கூடுதல் தடைகள் விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஈரானுக்குத் தக்க பதிலடி கொடுப்பது குறித்து கலந்துரையாட இஸ்ரேலிய அமைச்சர்களும் ராணுவ உயர் அதிகாரிகளும் ஏப்ரல் 17ஆம் தேதியன்று கூடினர்.
இத்துடன் இக்கூட்டம் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 13ஆம் தேதி இரவு இஸ்ரேலை நோக்கி ஈரான் 300க்கும் மேற்பட்ட ஆளில்லா வானூர்திகளை அனுப்பியதுடன் பல ஏவுகணைகளையும் பாய்ச்சியது.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றை அமெரிக்க ராணுவத்தின் உதவியுடன் இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது.
இருப்பினும், இதன் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்கெனவே தலைவிரித்தாடும் வன்முறை மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரான் நடத்திய தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேலிய ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி சூளுரைத்துள்ளார். ஆனால் அதுகுறித்து அவர் மேல் விவரங்களை வெளியிடவில்லை.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சில நாடுகள் ஈரானுக்கு எதிரான தடைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசஃப் பொரேல் தெரிவித்தார்.