சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) புறப்பட்ட ஸ்கூட் விமானம் ஒன்றில் புகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்திற்கு அது திரும்பியது.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்கூட் நிறுவனம், காலை 7.33 மணிக்கு பாலித் தீவுக்குப் புறப்பட்ட டிஆர்280 விமானம் ‘முன்னெச்சரிக்கையாக’ காலை 8.27 மணியளவில் சாங்கியில் தரையிறங்கியதாகக் கூறியது.
புகை கண்டறியப்பட்டதற்கான காரணத்தையோ எத்தனை பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்ற விவரத்தையோ வெளியிட ஸ்கூட் மறுத்தது.
பயணிகளுக்கு இழப்பீடாக உணவு பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அவர்களை பாலித் தீவுக்குக் கொண்டுசெல்ல வேறொரு விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் ஸ்கூட் கூறியது.
பிற்பகல் 12.40 மணிக்கு சாங்கியில் இருந்து புறப்பட்ட அந்த விமானம், பிற்பகல் 3 மணியளவில் டென்பசாரில் தரையிறங்கியது.