அனுஷா செல்வமணி
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி நிகழ்வாக நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம், சங்க இலக்கியத்தைத் தழுவிய ‘பார்வை’ எனும் படைப்பை மேடைஏற்றியது.
குறுந்தொகையை ஒட்டிய இந்தப் படைப்பு, ‘அன்பின் அழகே’ எனும் தலைப்பில் சங்க காலக் காதலை இக்காலத்து இளையர்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அமைந்தது.
“13 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம், ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மொழி மாதத்தின்போது, பார்வையை மேடையேற்றும். இம்முறை சங்க காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட காதலை அழகாகச் சித்திரித்துள்ளது,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் ஸ்ரீவைஷ்ணவி.
காதலிக்கும் இருவரிடையே நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதோடு எந்தவொரு சிறிய சிக்கலாக இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிடாமல் அந்தப் புனிதமான உறவின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்தது நாடகம்.
நடனமணிகள், பாடகர்கள் எனக் கலைஞர்கள் படைப்புக்கு மேலும் வலுசேர்த்தனர்.
நகைச்சுவை பாணியில் கடந்த 1ஆம் தேதியன்று உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி, 200 பார்வையாளர்களை ஈர்த்தது.
நான்கு மாதத் திட்டமிடுதலின்போது இளையர்கள் தமிழ்மொழி மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளவும் தமிழை ஒரு பாடமாகப் பிற்காலத்தில் அவர்கள் பயில ஊக்குவிக்கவும் பார்வை அமையவேண்டும் என்ற நோக்கில் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்
பட்டன.
மேலும், காதல் உணர்வை முன்னிலைப்படுத்தினால் அது புத்தாக்க முயற்சியாக இருப்பதோடு இளையர்களை விரைவில் சென்றடையும் என்றும் உறுதியாக இருந்தனர், பார்வை படைப்பின் இயக்குநர்களான சிவசண்முக பிரியா, 19, மற்றும் மரியா இமெகியூலட், 21.
வசனம் எழுதுதல், படிப்பிற்கும் ஒத்திகைக்கும் நேரத்தை வகுத்தல், நாடகத்திற்குக் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தல், குறிப்பாக அவர்களுக்குக் குறுந்தொகையைப் புரிய வைத்தல் போன்ற சவால்களை இவர்கள் சந்தித்தபோதும் பார்வை வெற்றிகரமாக அரங்கேறியது.
கதையோட்டம் இல்லாமல் வெறும் பாடல்களின் மூலம் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஐந்திணைகளைக் கோர்வையாக நாடக வடிவில் படைப்பது எளிதல்ல. இருப்பினும், தேசிய கல்வி கழகத்தில் தமிழ்மொழித் துறையில் இளங்கலைப் பட்டம் பயிலும் மரியாவும் பிரியாவும் தங்களின் விரிவுரையாளர்களின் உதவியோடு இதைப் படைத்தனர்.
தமிழ் இலக்கிய மன்றத்தின் நாடகப் பிரிவில் உறுப்பினராக இருக்கும் ஸ்ருதிகா குமார், 19, பெரிதளவில் நடைபெறும் படைப்பில் நடித்தது இதுவே முதல் முறை.
இனியாள் கதாபாத்திரமாக, முல்லைக் காட்டுப் பெண்ணாக நடித்த இவர், “படிப்புச் சுமை அதிகமாக இருந்தாலும், நடிப்பதில் எனக்குப் பேரார்வம். மேடை நாடகத் திறன்களை வளர்த்துக்கொண்டதோடு எனக்கு ஒரு முக்கியக் கதாபாத்திரம் அளித்தது மகிழ்ச்சிக்குரியது,” என்று பூரிப்புடன் தெரிவித்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியும் நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் ஒருவருமான 22 வயது சீனிவாசன் ஸாந்தினி, “நீண்ட காலம் கழித்து மீண்டும் பார்வை நிகழ்ச்சியைப் பார்வையிட வந்தது எனக்கு என் பழைய நினை
வலைகளில் பயணிப்பது போல் இருந்தது. நிகழ்ச்சி மிகப் புதுமையாகவும் இக்காலத்து இளையர்கள் தொடர்புப்படுத்திப் பார்க்கும் வகையாகவும் அமைந்தது,” என்று பகிர்ந்துகொண்டார்.
படம்: ஏற்பாட்டுக்குழு