ஆ. விஷ்ணு வர்தினி
பதின்ம வயதிலிருந்தே விக்னேசா பசுபதி, குமரேசா பசுபதி, ஷாஸ்னி ராம்லி ஆகிய மூவரும் சிங்கப்பூர் தேசிய தரைப்பந்து அணியில் விளையாடியவர்கள். தென்கிழக்காசிய விளையாட்டுகள், அனைத்துலக ஆண்கள் தரைப்பந்து போட்டிகள் முதலியவற்றில் இவர்கள் சிங்கப்பூருக்கு பதக்கங்களை வென்று தந்தவர்கள்.
மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் தரைப்பந்து விளையாட்டு என வரும்போது இளையர்களுக்கு உள்ள ஆதரவு குறைவே எனத் தத்தம் பயணங்களில் உணர்ந்த இம்மூவரும், அக்குறையைப் போக்க எண்ணி ‘ஸ்டார் ஃப்ர்ளோர்பால் அகாடமி’ எனும் பயிற்சிக் கழகத்தைத் தொடங்கியுள்ளனர்.
சிறார் முதல் 17 வயது வரையிலான இளையர்களுக்கு இக்கழகம் பயிற்சி அளித்து வருகிறது. இக்கழகத்தில் பயிற்சி வழங்கும் 9 பயிற்றுவிப்பாளர்களில் தற்போதைய தேசிய தரைப்பந்து விளையாட்டாளர்களும் முன்னாள் விளையாட்டாளர்களும் அடங்குவர். சிறுவர்
களுக்குத் தனிப்பட்ட முறையில் தொடர் பயிற்சியும் தொழில்முறை தரைப்பந்து குறித்த வழிகாட்டுதலும் வழங்கும் தளமாக இயங்குவதே இக்கழகத்தின் நோக்கம் என்று மூவரும் தெரிவித்தனர்.
“சிறுவயதிலிருந்தே தேசிய விளையாட்டாளர்களின் துணைகொண்டு மாணவர்கள் பயிற்சி எடுக்கும்போது, அவர்களுக்குத் தரைப்பந்து மீதான ஆர்வம் அதிகரிக்கும் என நம்பினோம். எங்களின் அனுபவங்களைக் கொண்டு, தொழில்முறை தரைப்பந்தில் சிறந்து விளங்குவதற்கான வழிகாட்டுதலையும் நம்பிக்கையையும் அடுத்த தலைமுறையினருக்கு அளிக்க முற்பட்டுள்ளோம்,” என்றார் 26 வயது குமரேசா பசுபதி. இரட்டையரான குமரேசாவும் விக்னேசாவும் தொடக்கப்பள்ளியிலிருந்தே தரைப்பந்து விளையாடி வந்திருக்கிறார்கள். இவர்களின் நோக்கத்துக்குக் கைகொடுக்க, அவர்களின் கோரிக்கையை ஏற்று அல்லது தாமாகவே பயிற்றுவிப்பாளர்
களாக இணைய முன்வந்திருந்தனர் சக தரைப்பந்து அணி விளையாட்டாளர்கள்.
ஷாஸ்னி, குமரேசா, விக்னேசா ஆகியோரின் நட்பு கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் தேசிய அணியில் தொடங்கியது. தொடக்கக் கல்லூரி காலத்தில் விக்னேசா, குமரேசா இருவரின் பள்ளி தரைப்பந்து பயிற்றுவிப்பாளராக ஷாஸ்னி இருந்தார். பின்னர், தேசிய ஆண்கள் தரைப்பந்து அணியின் தலைவராகப் பரிமாணம் கண்டார். 13 ஆண்டுகளாக தரைப்பந்து பயிற்றுவிப்பாளராக இருந்துவரும் ஷாஸ்னி, தற்போது சிங்கப்பூரின் ‘யு19’ அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு, உடற்பயிற்சிக் கல்வி பயிலும் விக்னேசாவும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் பயிலும் குமரேசாவும் தரைப்பந்திலிருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்றிருந்த ஷாஸ்னியைச் சந்தித்து, பயிற்சிக் கழகம் தொடங்குவது குறித்து பேசினர்.
“இக்கழகத்தைத் தொடங்குவதற்கான திறன்கள் எங்கள் மூவரிடமும் இருந்ததென அவர்கள் திண்ணமாக கூறினர். என் பயிற்றுவிப்பு அனுபவத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர். எங்கள் மூவரின் தனிப்பட்ட திறன்களையும் பலங்களையும் ஒன்றிணைத்ததன் பயனாக இக்கழகம் பிறந்தது,” என்றார் 32 வயது ஷாஸ்னி.
இளையர்களுடன் இணைந்து செயல்படுவது இம்மூவரின் மனதுக்கு நெருங்கிய ஒன்றாகும். பள்ளிகளில் பகுதிநேரத் தரைப்பந்து பயிற்றுவிப்பாளராக உள்ள விக்னேசா, “வளரும் பருவத்தில் தரைப்பந்து விளையாடுவது அவர்களின் மனநலனுக்கும் உடல்நலனுக்கும் துணைநிற்கும். குறிப்பாக, எளிதில் பாதிப்படையும் அபாயத்தில் உள்ள இளையர்களை விளையாட்டில் ஈடுபடுத்துவதன்மூலம் அவர்களுக்கு உதவலாம் என்று நம்புகிறோம்,” என்றார். ஜனவரியில் இக்கழகத்தைத் தொடங்கிய மூவருக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக விக்னேசா கூறுகிறார். முதல் பயிற்சி நாளன்று ஏறத்தாழ 60 பேர் வந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“அரங்கம் நிறைய பெற்றோர் அமர்ந்து பயிற்சியின்போது தங்களின் பிள்ளைகளை ஊக்குவித்த காட்சி எங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததுபோன்ற உணர்வைத் தந்தது,” என்று அவர் கூறினார்.
விக்னேசா, குமரேசாவின் தாயார் இவர்களின் முயற்சி குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
“வர்த்தக நோக்கத்தைவிட சமூகத்துக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் ஆதரவளிக்கவேண்டும் என்ற இவர்களின் நோக்கம் எங்களைப் பெருமையடைச் செய்துள்ளது,” என்றார் 66 வயது திருவாட்டி ஜெயந்தி ஸ்ரீநிவாசன்.
சிறுவயதிலிருந்தே குழுவுணர்வு, விட்டுக்கொடுக்கும் தன்மை, தலைமைத்துவம் ஆகிய திறன்களை வளர்க்கும் தரைப்பந்து போன்ற விளையாட்டுகளை, சிறுவர்களிடத்தில் வலியுறுத்துவது அவசியமென நம்புவதாகவும் இவர் தெரிவிக்கிறார்.
இக்கழகத்தில் இணையும் மாணவர்கள் தங்களுடன் நீண்ட காலம் பயணிப்பர் என்ற நம்பிக்கை இம்மூவருக்கும் உள்ளது.