லண்டன்: இங்கிலாந்துத் தலைநகர் லண்டனிலிருந்து பிரான்சின் நீஸ் நகருக்குச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 73 வயது பெண் பயணி ஒருவர் இறந்துபோனார்.
முன்னதாக, அவர் உறங்குகிறார் என்று சக விமானப் பயணிகள் நினைத்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
அவரைப் பலமுறை எழுப்பிப் பார்த்தும் அவர் கண்விழிக்காததால் கவலையடைந்த பயணிகள், பின்னர் விமான ஊழியர்களை அழைத்தனர்.
பின்னர் விமான ஊழியர்கள், துணை மருத்துவ ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். துணை மருத்துவ ஊழியர்கள் அம்மூதாட்டியை உயிர்ப்பிக்க முயன்றும் அவர்களது முயற்சி பயனில்லாமல் போனது.
இறுதியில், அம்மூதாட்டி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் ஐயப்படுவதாக ‘தி கனெக்ஷன்’ என்ற பிரெஞ்சு ஊடகம் தெரிவித்தது.
விமானம் பறந்துகொண்டிருந்தபோதே அப்பெண் இறந்துவிட்ட நிலையில், விமானம் தரையிறங்கிய பிறகே அது தெரியவந்தது.
அம்மூதாட்டி இறந்துபோனதை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியது.
“லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து நீஸ் நகருக்குப் புறப்பட்ட பெண் பயணி ஒருவர் இறந்துவிட்டார். இந்தத் துயரச் சூழலில் அவருடைய குடும்பத்தினர்க்காக வருந்துகிறோம்,” என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியதாக ‘டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது.