கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமையன்று (மே 7) பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து பரபரப்பான சாலையின் குறுக்கே விழுந்ததில் குறைந்தது ஒருவர் மாண்டுபோனார்.
பலத்த காற்று, பெருமழைக்கு இடையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
மரம் விழுந்து அமுக்கியதால் வாகனங்களுக்குள் பலர் சிக்கிக்கொண்டதாக ‘நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி தெரிவித்தது.
‘மோனோ’ ரயில் தண்டவாளத்திலும் சாலையிலும் மரம் விழுந்ததை அடுத்து, கேஎல் சென்ட்ரல் - மேடான் துவாங்கு இடையிலான ஒன்பது ரயில் நிலையங்களில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக ‘ரேப்பிட் கேஎல்’ ரயில் சேவை நிறுவனம் தெரிவித்தது.
கன்கார்டு ஹோட்டலுக்கு அருகே, ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் தங்கள் கார்களுக்குள் சிக்கிக்கொண்ட இருவரை மீட்டதாகக் கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புத் துறை கூறியது.
அவர்களில் 47 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டுபோனதாகத் தெரிவிக்கப்பட்டது.
இன்னொரு 26 வயது ஆடவருக்குப் பல காயங்கள் ஏற்பட்டிருந்தன.
மரம் விழுந்ததால் பாதிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து அவற்றின் ஓட்டுநர்களையும் பயணிகளையும் மீட்க மக்கள் உதவியதை இணையத்தில் பகிரப்பட்ட படங்கள் காட்டின.
முன்னதாக, திங்கட்கிழமை மாலையில் பினாங்கில் வீசிய திடீர் புயலால் பத்து இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்ததாக ‘தி ஸ்டார்’ செய்தி வெளியிட்டிருந்தது.