டொனெட்ஸ்க், உக்ரேன்/வாஷிங்டன்: உக்ரேனிய அரசாங்கம் ரஷ்யப் படைகளுக்கு எதிரான போரை மேற்பார்வையிடும் நாட்டின் முன்னணி ராணுவத் தளபதியைப் பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக வெள்ளை மாளிகையிடம் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறியுள்ளன.
ராணுவ உத்திகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஜெனெரல் வெலரி ஸலுஸ்னிக்கும் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதிய ராணுவத் திட்டம் ஒன்றின் தொடர்பில் 500,000 புதிய படையினரைப் பணியில் அமர்த்துவதற்கு ஜெனரல் ஸலுஸ்னி செய்த பரிந்துரையை அதிபர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
உக்ரேன் ஆயுதப் படையின் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ஜெனரல் ஸலுஸ்னியைப் பணிநீக்கம் செய்யும் செயல்முறை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன. அவரின் பதவியைத் தொடர்வதற்குத் தகுதியான ஒருவரை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதே அதற்குக் காரணம்.
ஜெனரல் ஸலுஸ்னியைப் பணிநீக்கம் செய்யும் திட்டத்தை வெள்ளை மாளிகை ஆதரிக்கவோ, நிராகரிக்கவோ இல்லை என்று மற்றொரு தகவல் தெரிவித்தது.