பெட்டாலிங் ஜெயா: அண்மையில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டதை அடுத்து, மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது.
அந்த ஆட்டத்தில் ஜோகூர் டாருல் தக்சிம்முடன் அது மோத இருந்தது.
சிலாங்கூரின் நட்சத்திர ஆட்டக்காரர் ஃபைசால் ஹாலிம் மீது அண்மையில் அமில வீச்சு நடத்தப்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மே 5ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கோத்தா டமான்சாரா கடைத்தொகுதியில் அவர் தாக்கப்பட்டார்.
“கடந்த 72 மணி நேரத்தில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகளுக்கு எதிரான தாக்குதல்களையும் விடுக்கப்பட்ட மிரட்டல்களையும் கருத்தில் கொண்டு அவர்களது பாதுகாப்புக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேரிட்டி ஷீல்டு ஆட்டத்தில் விளையாடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்,” என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு கூறியது.
சிலாங்கூர் காற்பந்துக் குழு எடுத்துள்ள இந்த முடிவுக்கு சிலாங்கூர் மன்னர் சுல்தான் ஷரஃபுதீன் இட்ரிஸ் ஷா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆட்டக்காரர்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டும் சேரிட்டி ஷீல்டு ஆட்டத்தைத் தொடர மலேசியக் காற்பந்துச் சங்கம் முடிவெடுத்திருப்பது ஏமாற்றமளிப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.