பேங்காக்: தாய்லாந்தில் கஞ்சா குறித்த கொள்கையை மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் புதிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் கடந்த மே 7ஆம் தேதி திரு சோம்சாக் தெப்சுதீன் புதிய சுகாதார அமைச்சராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் இந்த சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.
கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து அறிய பொதுமக்களிடம் கருத்துக்கேட்கும் பணியில் அமைச்சு ஈடுபட்டுள்ளது என்று திரு சோம்சாக் தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்குக்காக கஞ்சா பயன்படுத்துவது 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் தடை செய்யப்படும். ஆனால் மருத்துவப் பயன்பாட்டிற்கு தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சோம்சக் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து கடந்த 2018ஆம் ஆண்டில் கஞ்சாவை மருத்துவத்திற்குப் பயன்படுத்த அனுமதி அளித்தது. பின்னர் 2022ஆம் ஆண்டு பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்த அனுமதியளித்தது. அதையடுத்து, சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட தாய்லாந்தின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான கஞ்சா கடைகள் திறக்கப்பட்டன. கஞ்சா தொழில்துறை மூலம் 2025ஆம் ஆண்டுக்குள் தாய்லாந்து S$1.6 பில்லியன் வருமானம் ஈட்டும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.