போர்ட்டோ அலெக்ரே: தெற்கு பிரேசிலில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கிட்டத்தட்ட 70,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டது.
மோசமான வெள்ளத்தால் குறைந்தது 57 பேர் மாண்டுவிட்டனர், 74 பேர் காயமுற்றனர். குறைந்தது 67 பேரைக் காணவில்லை.
தெற்கு பிரேசிலின் முக்கிய நகரான போர்ட்டோ அலெக்ரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் வெள்ளம் சூழ்ந்த பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் இருவர் மாண்டனர்.
அச்சம்பவத்தை ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் நேரில் பார்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மொத்த மரண எண்ணிக்கையில் இந்தப் புள்ளி விவரம் சேர்க்கப்படவில்லை.
ரியோ கிராண்டே டொ சுல் மாநிலத்தில் நீரின் அளவு வேகமாக அதிகரித்து வருவதால் அங்கு அணைக்கட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் குறிப்பாக பொருளியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த போர்ட்டோ அலெக்ரேவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அந்நகரில் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
1941ஆம் ஆண்டில் பிரேசில் மோசமான வெள்ளத்துக்கு உள்ளானது. அப்போது போர்ட்டோ அலெக்ரே நகரின்வழி ஓடும் குவாய்பா ஆற்றில் நீர் மட்டம் 4.76 மீட்டராக இருந்தது.
இப்போது அந்த ஆற்றில் நீர் மட்டம் அதற்கும் அதிகமாக 5.04 மீட்டரில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.