கோலாலம்பூர்: டீசலுக்கான மானியக் குறைப்பு குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சரவை மட்டத்தில் மானியக் குறைப்பு குறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“மலேசியாவின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டைக் கண்டு வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடலாம், எடுத்துக்காட்டாக ஜோகூரில் சூதாட்டக் கூடம் கட்டுவது பற்றி மலேசிய அரசாங்கம் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை. ஆனால் அது குறித்து செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது,” என்றார் அன்வார்.
“தற்போது மலேசிய அரசாங்கம் டீசலுக்காக வழங்கப்படும் மானியத்தை திரும்பப்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மானியம் குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைதான் நடக்கிறது, இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை,” என்று அன்வார் குறிப்பிட்டார்.
ஊடகங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும், செய்திகளில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.